
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியின்போது சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோஹ்லி, ஆதில் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார். இதை எதிர்பார்க்காத கோஹ்லியின் முகபாவனைகள் தான் தற்போது சமூகதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் வென்று, தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. மிகவும் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோஹ்லி, 72 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார்.
36வது ஒருதின சதம் அடிப்பார் என்று நினைத்த நிலையில், ஆதில் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். அந்தப் பந்து, மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப்களுக்கு நடுவில் பிட்ச்சாகி, இடதுபக்கம் திடீரென திரும்பி, ஆப் ஸ்டம்பின் முனையில் பட்டு, பெயில்ஸை வீழ்த்தியது.
பந்து இவ்வளவு வேகமாக, இந்த அளவுக்கு திரும்பும் என்று கோஹ்லி நினைத்து பார்க்கவில்லை. அதனால், மிரண்டுபோன அவர், முகத்தில் காட்டிய அந்த பாவனைகள்தான் தற்போது வைரலாகி வருகிறது.
2014ல் இலங்கை தொடருக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ஸ்பின்னர்கள் பந்துவீச்சில் கோஹ்லி ஆட்டமிழந்துள்ளார்.
இதனிடையில் ஒருதினப் போட்டிகளில் மிகவும் வேகமாக 3000 ரன்கள் கடந்த கேப்டன் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார். ஏற்கனவே, 1000 மற்றும் 2000 ரன்களை வேகமாக சேர்த்த சாதனையும் அவரிடமே உள்ளது.