
தோனி, ரிஷப் பண்ட் வாய்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி, ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பிடித்தனர். இதில் தோனி 300 போட்டிகளுக்கு மேல் ஆடிய மூத்த வீரர். அவரது பேட்டிங் மட்டும் தான் கொஞ்சம் சறுக்கி உள்ளதே ஒழிய கீப்பிங்கில் கில்லியாக இருக்கிறார். ரிஷப் பண்ட்டுக்கு இந்த தொடர் தான் முதல் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர். மிக சொற்ப டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்தும் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இருப்பார், தோனி விக்கெட் கீப்பிங்கை தொடருவார் எனவும் கூறப்பட்டது.

ரிஷப் பண்ட் நீக்கம்
ரிஷப் பண்ட்டின் வருகையை வைத்து தோனிக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள், அணியில் இருந்து தோனியை தூக்கத்தான் ரிஷப் பண்ட் உள்ளே வருகிறார் என ஏராளமான பேச்சுக்கள் கிளம்பின. ரிஷப் பண்ட் மூன்று போட்டிகளில் இரண்டு முறை பேட்டிங் வாய்ப்பு பெற்றார். அதில் 17, 24 என சொற்ப ரன்களே எடுத்தார். இதையடுத்து நான்காம் போட்டியில் கேதார் ஜாதவை அணியில் சேர்க்க ரிஷப் பண்ட்டை அணியில் இருந்து தூக்கி விட்டார்கள். ஆனால், இதை வேறு மாதிரி பார்த்தால் தோனியை காப்பாற்றவே ரிஷப் பண்ட்டுக்கு பதில் ஜாதவ் உள்ளே வந்தார் என்பது புரியும் என்கிறார்கள் சிலர்.

கேதார் ஜாதவ் மர்மம்
கேதார் ஜாதவ் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட அணியில் சேர்க்கப்படாமல் இருந்து, பின் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளால் அணியில் சேர்க்கப்பட்டு, 4வது ஒருநாள் போட்டியிலேயே 11 வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். கேதார் ஜாதவை அணியில் ஏன் முதலில் எடுக்காமல் போனார்கள் என்ற கேள்விக்கு, அவர் இன்னும் தன் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என பொய்யான ஒரு காரணத்தை கூறினார்கள். பின் அவரை ஏன் அணியில் சேர்த்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

ஜாதவ் பேட்டிங் மட்டும் தானா?
கூடுதல் பந்துவீச்சாளர்கள் தேவை என்பதற்காக அவரை அணியில் சேர்த்து இருந்தால், 4வது ஒருநாள் போட்டியில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அப்படியானால், ஜாதவை ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற தகுதியில் தான் சேர்த்து இருக்கிறார்கள். 4வது போட்டியில் கூட அவரை தோனிக்கு பின் தான் களம் இறக்கினார்கள். தோனி சரியாக ஆடாவிட்டால் கூட, ஜாதவ் சமாளித்து அணியை கரை சேர்ப்பார் என்ற திட்டத்தோடு தான் அவரை அணியில் சேர்த்துள்ளனர் என கூறப்படுகிறது.

கோலி ஆதரவா?
தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் அணியில் உலகக்கோப்பை வரை அவரை வைத்திருக்க கோலி முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. தோனியின் தலைமை அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை கோலிக்கு நிச்சயம் தேவை. அதே சமயம், தோனி பேட்டிங்கில் பார்முக்கு திரும்பும் வரை அதை சமாளிக்கவும் வேண்டும். அதை தான் கோலி செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications