மும்பை: இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் 'ஒயிட்வாஷ்' ஆகி வரலாற்றுச் சரிவைச் சந்தித்த நிலையில், பிசிசிஐ தற்போது ஒரு அதிரடி முடிவை எடுக்க ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலியை, மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்புமாறு பிசிசிஐ கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. அனுபவமற்ற பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு, சொந்த மண்ணிலேயே சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இதுபற்றி வெளியாகி இருக்கும் தகவலின்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலியை மீண்டும் அணிக்கு அழைப்பது குறித்த பேச்சுவார்த்தை பிசிசிஐ வட்டாரத்தில் தொடங்கியுள்ளது. விராட் கோலி மட்டுமல்லாமல், சமீபத்தில் ஓய்வு பெற்ற மற்றொரு முன்னணி வீரரும் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றனர். அவர்களைத் தொடர்ந்து டிசம்பர் 2024-ல் அஸ்வினும் ஓய்வு பெற்றார். புஜாரா, ரஹானே போன்ற சீனியர்கள் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால் இந்திய டெஸ்ட் அணி அனுபவமில்லாத இளம் வீரர்களை மட்டுமே நம்பியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், "அணி ஒரு மாற்றுக் கட்டத்தில் உள்ளது. வீரர்களுக்கு அனுபவம் இல்லாததே தோல்விக்குக் காரணம்" என்று கூறியிருந்தார்.
இதை இப்போது உணர்ந்துள்ள பிசிசிஐ, "அனுபவம் இல்லை என்றால், அனுபவம் வாய்ந்த பழைய வீரர்களையே மீண்டும் அழைப்போம்" என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவான் மிடில் ஆர்டரில் இருந்தால், இளம் வீரர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் என்று நிர்வாகம் கருதுகிறது.
இதற்கிடையில், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தற்போது அகமதாபாத்தில் நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். ரஞ்சி ட்ராபி ஆடும் வீரர்களைத் தேர்வு செய்யாமல், ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் ஆடும் வீரர்களை டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்வதாக அகர்கர் மற்றும் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது இந்திய அணி இருக்கும் நிலையில், விராட் கோலி மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பினால் மட்டுமே அணியின் சரிவைத் தடுக்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கோலி இந்த அழைப்பை ஏற்பாரா என்பது மாபெரும் கேள்வியாக உள்ளது.