சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். அவர் கேப்டனாக இருந்தும் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவரை தொடர்ந்து விராட் கோலியிடம் இந்திய அணியின் தேர்வுக் குழு பேச உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணியின் மூத்த வீரர்களை வெளியேற்றுவது பற்றிய பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு எடுத்துள்ள முக்கிய முடிவு பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

இந்திய டெஸ்ட் அணியில் முன்பு ஏழு முக்கிய மூத்த வீரர்கள் இருந்தனர். அவர்களில் அஜிங்கியா ரஹானே மற்றும் புஜாரா டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்களை தேர்வுக் குழு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓரங்கட்டி விட்டது. அடுத்து வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். இனி அவருக்கு எப்போதும் டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படாது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா என நான்கு மூத்த வீரர்கள் டெஸ்ட் அணியில் இருந்தனர். அவர்களில் அஸ்வின் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறினார்.
அதன் பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மட்டும் இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வந்தனர். இருவருமே பேட்டிங்கில் சரியாக ரன் குவிக்க முடியாத நிலையிலேயே இருந்தனர். அதிலும் ரோஹித் சர்மா கேப்டனாகவும் மிக மோசமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்ததால், அந்தப் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணியை விளையாட வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதை ஒட்டி ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் இருந்து தேர்வுக் குழு நீக்கி உள்ளது. அடுத்து விராட் கோலியிடம் ஐந்தாவது போட்டியின் முடிவில் தேர்வுக் குழு பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விராட் கோலி கடந்த நான்கு ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் சராசரி வெகுவாக சரிவை சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலியிடமும் இனி டெஸ்ட் போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவலை தேர்வு குழு கூற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஒருவேளை அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டுமென்றால் அவர் இனி உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படலாம்.
இந்த நிலையில் ஒரே ஒரு மூத்த வீரரை மட்டும் தேர்வுக் குழு விட்டு வைக்க உள்ளது. அவர் ரவீந்திர ஜடேஜா. அவர் ஆல் ரவுண்டராக இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஃபீல்டராகவும் துடிப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே, அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.