டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வரவிருக்கும் 2025-26 விஜய் ஹஸாரே டிராபி தொடரில் டெல்லி அணிக்காகக் களமிறங்கவுள்ளார். டெல்லி கிரிக்கெட் சம்மேளனம், அண்மையில் 50 ஓவர் உள்நாட்டுத் தொடருக்கான 50 பேர் கொண்ட உத்தேச வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. கோலியுடன், விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பன்ட்டும் அணியில் இணைவார்கள் என்று DDCA உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில், ஆலோசனைக் குழுவின் தலைவர் விஜய் தஹியா, மற்றும் செயலாளர் அஷோக் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் பிறகு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில், சையத் முஷ்டாக் அலி டிராபி அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இவர்களுடன், விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் விஜய் ஹஸாரே டிராபிக்காக அணியில் இணைவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு டி20ஐ போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், கோலியும் பன்ட்டும் இத்தொடரில் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது தெரியவில்லை.டெல்லி அணி, வரும் டிசம்பர் 24 அன்று ஆந்திரப் பிரதேசத்திற்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. டெல்லி அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இக்குழுவில் ரயில்வேஸ், ஆந்திரா, ஹரியானா, குஜராத், சவுராஷ்டிரா, சர்வீஸஸ் மற்றும் ஒடிசா ஆகிய அணிகளும் அடங்கும்.
விராட் கோலி கடைசியாக, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றார். அதில் அவர் சிறந்த ஃபார்மில் காணப்பட்டார். இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். ராய்ப்பூரில் நடந்த அடுத்த போட்டியில், அணி தோல்வியடைந்தபோதிலும் 93 பந்துகளில் 102 ரன்கள் எடுத்துச் சதம் விளாசினார்.
மேலும், விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 45 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்று இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 302 ரன்கள் குவித்தார். இந்தியாவின் அடுத்த ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது. இதில், முதல் போட்டி ஜனவரி 11 அன்று வதோதராவில் நடைபெறும்.