லண்டன்: இந்திய அணியை விட்டு விலகி இருக்க விராட் கோலி முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் இங்கிலாந்து ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
விராட் கோலி லண்டனில் குடியேறி சில ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் தற்போது லண்டன் வாசியாகவே மாறிவிட்டார். இந்தச் சூழலில், லண்டனில் உள்ள மைதானங்களில் இந்திய அணி ஆடும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளின் போது விராட் கோலி நேரில் வந்து போட்டியைப் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விராட் கோலி இந்திய அணியின் போட்டிகளில் இருந்து தள்ளியே இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது வீட்டிற்கு அருகிலேயே இந்தப் போட்டிகள் நடைபெற்றாலும் அவர் நேரில் வரமாட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தனது புகழ் வெளிச்சத்திலிருந்து சற்று விலகி, ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் லண்டனில் வசித்து வருகிறார். இந்தியாவில் விராட் கோலி எங்கு சென்றாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிடுவதால், அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
லண்டனில் அவர் ஒரு சாதாரண மனிதரைப் போல பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறார். அவர் லண்டனில் ரயிலில் பயணித்த சில வீடியோக்களும் கூட சமீபத்தில் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவர் லண்டனில் நடைபெறும் இந்திய அணியின் போட்டிக்குச் சென்றால், அதன் மூலம் இங்கிலாந்திலும் அவர் மீதான புகழ் வெளிச்சம் அதிகரித்து, அது அவரது குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால், அவர் மைதானத்திற்குச் செல்லப் போவதில்லை எனக் கூறப்படுகிறது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானங்களில் இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் நடைபெற உள்ளன. எனினும், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் புதிய கேப்டன் சுப்மன் கில் ஆகியோரைத் தனது வீட்டிற்கு அழைத்து விராட் கோலி விருந்தளித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.