சென்னை : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி டைவ் அடித்து பிடித்த கேட்ச் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
புலி இரையை பிடிப்பது போல கோலி பாய்ந்து பந்தை பிடித்தார் என கோலி ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

இந்த ஒரு கேட்ச் மூலம் உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் அனில் கும்ப்ளே வைத்திருந்த உலகக்கோப்பை ரெக்கார்டையும் உடைத்து இருக்கிறார் விராட் கோலி.
ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் கோலியின் அந்த கேட்ச்சால் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
முன்னதாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் துவக்கம் அளித்தனர்.

இந்தியா சார்பில் முதல் ஓவரை வீசினார் பும்ரா. முதல் ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 1 ரன் கிடைத்தது. இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் நான்கு ரன்கள் கிடைத்தது. மூன்றாவது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த மிட்செல் மார்ஷ் பந்தை எட்ஜ் செய்தார்.
ஸ்லிப்பில் பீல்டிங் நின்று இருந்த விராட் கோலி ஒரு விநாடி கூட யோசிக்காமல் பாய்ந்து, டைவ் அடித்து பந்தை பிடித்தார். ரசிகர்கள் அப்போது ஆர்ப்பரித்தனர். மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதுவரை உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் விக்கெட் கீப்பர் அல்லாதவர்களில் அதிக கேட்ச் பிடித்தவர் அனில் கும்ப்ளே. அவர் 14 கேட்ச்களை பிடித்து இருந்தார். அவரை முந்தி இருக்கும் விராட் கோலி தற்போது 15 கேட்ச்களை பிடித்து இருக்கிறார்.
இதே பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடங்களில் கபில் தேவ் 12, சச்சின் டெண்டுல்கர் 12 கேட்ச்களை பிடித்து உள்ளனர். இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து தான் ஒரு சிறந்த பீல்டர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார் விராட் கோலி.