கவுஹாத்தியில் இன்று துவக்கம்
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சர்வதேச டி20 தொடர் கவுஹாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கவுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் மேற்கிந்திய தீவுகளிடம் தொடரை வென்ற இந்தியா, அந்த வெற்றியை தொடரும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.
பல விஷயங்கள் குறித்து பேசிய விராட்
இந்நிலையில் ஆண்டின் முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் விராட் கோலி, மிடில் ஆர்டர், சக வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்தார்.
விராட் கோலி கோரிக்கை
அணியை பொறுத்தவரை சர்வதேச அளவில் மிகப்பெரிய போட்டிகளில் பங்கேற்பதற்கு பயமற்ற வெற்றி வீரர்கள் அவசியம் என்று விராட் கோலி தெரிவித்தார். அதற்காக வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் கோரிக்கை விடுத்தார்.
"நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும்"
துவக்க ஆட்டக்காரர்களை மட்டுமே நம்பியிருக்காமல் மிடில் ஆர்டரில் ஆடும் வீரர்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டு, துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக ஆடாத நெருக்கடி சூழல்களில் அணியை வழிநடத்தும் திறமையை பெற வேண்டும் என்றும் கோலி தெரிவித்தார்.
டி20 உலககோப்பை வீரர்கள் தேர்வு
தான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் போன்ற துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக ஆட முடியாத நெருக்கடி சூழல்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை அடுத்துவரும் தொடர்களில் காண முடியும் என்றும், இந்த சூழல்கள், டி20 உலக கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு உதவும் என்றும் கோலி கூறினார்.
புவனேஸ்வர்குமார், தீபக் ஷகர் இல்லாத தொடர்
காயம் காரணமாக புவனேஸ்வர் குமார், தீபக் சஹார் உள்ளிட்டோர் அணியில் இல்லாத நிலையில், இளம் பந்துவீச்சாளர்கள் நவ்தீப் சாய்னி, ஷர்துல் தாக்கூர் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், டி20 உலக கோப்பையில் இத்தகைய வலிமையான தேர்வுகள் அவசியம் என்றும் விராட் மேலும் கூறினார்.