“விராட் கோலி ஆடுவதை விட இந்த இங்கிலாந்து வீரர் ஆடுவதை பார்க்கலாம்”.. வாங்கிக் கட்டிய மைக்கேல் வான்
லண்டன்: கிரிக்கெட் களத்தில் விராட் கோலி அதிரடியாக ஆடுவதை பார்ப்பதை விட, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆடுவதை பார்ப்பது தான் நன்றாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ள இந்த ஒற்றை கருத்து, தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசி, 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை எளிதாக எட்ட உதவினார். கோலியின் இந்த அபார ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்து வீரரும், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வருபவருமான சாம் பில்லிங்ஸ், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், விராட் கோலி தனது முழு ஃபார்மில் விளையாடுவதை பார்ப்பதை விட சிறந்தது வேறு ஏதாவது உலகத்தில் இருக்கிறதா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே மைக்கேல் வான் இந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். சாம் பில்லிங்ஸ் பதிவிற்கு கீழ் கமெண்ட் செய்த மைக்கேல் வான், ஆம், ஜோ ரூட் விளையாடுவதை பார்ப்பது கோலியை விட சிறந்தது என குறிப்பிட்டு ஒரு கண் சிமிட்டும் எமோஜியையும் பதிவிட்டிருந்தார்.
மைக்கேல் வானின் இந்த நக்கல் கலந்த பதிவு இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. இதற்கு கோலியின் ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் ஆடுவதை பார்ப்பது தான் அழகு என சில இங்கிலாந்து ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதில் உச்சகட்டமாக இந்திய ரசிகர் ஒருவர், விராட் கோலி முழு ஃபார்மில் அதிரடியாக ஆடுவதை ஜோ ரூட் அமைதியாக வேடிக்கை பார்ப்பது தான் இதைவிட சிறந்தது என இருவரின் புகைப்படத்துடன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, தற்போது ஐபிஎல் தொடரில் தனது முழு கவனத்தையும் செலுத்தி விஸ்வரூபம் எடுத்து வருகிறார். ஆட்டத்தின் பிற்பாதியில் தனது அணுகுமுறையை மாற்றி அதிரடி காட்டி வரும் கோலி, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன போது ஆர்சிபி அணி வெற்றிபெற 38 பந்துகளில் 52 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகளும் இருந்தன.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 163.18 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 328 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் தக்க வைத்துள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு இதுவே கடைசி உள்ளூர் போட்டியாகும். அந்த அணியின் மீதமுள்ள உள்ளூர் போட்டிகள் மே 10 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
