புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. நடப்பு தொடரில் இதுவரை இரண்டு பலமான அணிகளை பலம் குன்றிய அணிகள் தோற்கடித்திருக்கிறது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அணியும்,பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணியும் அடுத்தடுத்து வீழ்த்தி இருக்கிறது. இதனால் நாளை ஆட்டத்தில் இந்தியாவுக்கு வங்கதேசம் அதிர்ச்சி அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனென்றால் கடந்த முறை இருதரப்பும் மோதிய ஒரு நாள் போட்டிகளில் வங்கதேசம் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றியை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கதேச அணி குறித்து விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். இந்த உலகக்கோப்பை தொடரில் பெரிய அணிகள் என்ற எதுவுமே கிடையாது.
எல்லாமே பலமான அணிகள் தான். நீங்கள் பெரிய அணி மீது மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயமாக இது போன்ற அப்சட்டுகள் நிகழும். வங்கதேச அணியை சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதுவும் ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் நான் நிறைய எதிர்கொண்டு இருக்கிறேன். அவர் பந்து வீசும் போது துல்லியமாக இருப்பார். மிகவும் அனுபவம் வாய்ந்த பவுலராக அவர் இருக்கிறார்.
புது பந்திலும் அவரால் சிறப்பாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைக்க முடியும். ரன்களையும் அவ்வளவாக கொடுக்க மாட்டார். இது போன்ற வீரர்களை எதிர்கொள்ளும் போது நீங்கள் உங்களுடைய சிறப்பான ஆட்டத்தில் இருக்க வேண்டும். அப்படி உங்களால் முடியவில்லை என்றால் நிச்சயம் இந்த பவுலர்கள் உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உங்களை ஆட்டமிழக்க வைத்து விடுவார்கள் என்று கூறினார்.
கோலியின் இந்தப் பாராட்டுக்கு பதில் அளித்துள்ள ஷகிபுல் ஹசன் கோலி, மார்டன் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். அவரை நான் ஐந்து முறை ஆட்டம் இழக்க வைத்ததை நினைத்து அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அவருடைய விக்கெட்டை எப்போது எடுத்தாலும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று பதில் அளித்துள்ளார்.