டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ரயில்வே அணிக்கு எதிரான டெல்லி விளையாடும் இந்த ஆட்டத்தை பார்க்க டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் நேற்று குவிந்தனர்.
இந்த சூழலில் நேற்று டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் விராட் கோலியின் ஆட்டத்தை முதல் நாள் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் டெல்லி அணி இன்று பேட்டிங் செய்த போது இரண்டு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்தது.

அப்போது மூன்றாவது விக்கெட்டுக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கினார். விராட் கோலி ஆப் ஸ்டம்ப்க்கு வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் அடித்து கேட்ச் ஆகிறார் என்பதுதான் அவர் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய விமர்சனமாக இருந்தது. இதற்காக அவர் மும்பையில் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த தருணத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அந்த வீக்னசை எதிர் கொண்டு பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரயில்வே அணியின் சங்வான் வீசிய இன் ஸ்விங் பந்தை கணிக்க தவறிய விராட் கோலி டிரைவ் ஆட முற்பட்டார். ஆனால் அவருடைய பேலன்ஸ் மிஸ் ஆனது. இதனால் பந்தை அவரால் தொடக் கூட முடியவில்லை. இதனால் பந்து, விராட் கோலியின் ஸ்டெம்பை பதம் பார்த்தது.
பந்து வந்த வேகத்தில் ஸ்டெம்பை மோதியதால் ஸ்டெம்ப் பறந்து சென்றது. இதனை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை ஸ்டெம்ப் பறந்து சென்றதாக கிண்டல் அடித்துள்ளார். மற்றொருவர் கோலி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு செல்லும் வரை ஸ்டெம்ப் பறந்து கொண்டே சென்று விழுந்ததாக கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
எப்படி கங்குவா திரைப்படம் 2000 கோடி அடிக்கும் என கூறி தயாரிப்பாளர் மொக்கை வாங்கினாரோ, அதேபோல் விராட் கோலி இன்று பட்டையை கிளப்புவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் பெரிய அளவு மொக்கை வாங்கியதாக சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் விராட் கோலியின் பேட்டிங்கை ரஞ்சி போட்டியில் பார்க்க 13 ஆண்டுகள் தாங்கள் காத்திருந்து கடைசியில் அது 23 நிமிடத்தில் முடிந்து விட்டதாகவும் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஹிமான்சு சங்வான் என்ற பவுலரிடம் ரசிகர்கள் சிலர் ஆட்டோகிராப் கேட்டு செல்ஃபி எடுக்க கேட்டனர். கோலி விக்கெட்டை 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் வீழ்த்தி அவர் சூப்பர் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார்.