டெல்லி : ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி திரும்பிய நிலையில் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். 13 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பின் டெல்லி அணிக்கு திரும்பிய விராட் கோலியின் இன்னிங்ஸ் வெறும் 23 நிமிடம் கூட நீடிக்கவில்லை.
விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டெல்லி அருண் ஜெட்டி மைதானத்தில் திரண்ட நிலையில் ரயில்வே அணியின் வேகப்பந்துவீச்சாளர் சங்வான், அபாரமாக பந்து வீசி அவரை போல்ட் ஆக்கினார்.

இந்த விக்கெட் எடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இது குறித்து தற்போது பேசியுள்ள ஹிமான்சு சங்வான், "இந்த போட்டிக்கு முன்பு டெல்லி அணியில் விராட் கோலியும், பண்ட்டும் விளையாடப் போகிறார்கள் என்ற செய்தியை நாங்கள் அறிந்தோம். இந்தப் போட்டி நேரலை செய்யப்படுமா என்பது குறித்தும் எங்களுக்கு சரியாக தெரியவில்லை".
"அதன் பிறகு தான் பண்ட், இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்றும் விராட் கோலி இந்த போட்டியில் பங்கேற்பார் என்றும் இதற்காக இந்த ஆட்டம் நேரலை செய்யப்படும் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. எங்கள் ரயில்வே அணியில் நான்தான் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருக்கின்றேன். இதனால் எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் நான் விராட் கோலியின் விக்கெட்டை நிச்சயம் எடுப்பேன் என்று நம்பிக்கை கொடுத்தார்கள்".
"நாங்கள் செல்லும் பேருந்து ஓட்டுனர் கூட விராட் கோலிக்கு, நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டெம்ப் லைனில் பந்து வீசுங்கள். அவர் அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்து விடுவார் என்று எனக்கு ஐடியா கூறினார்.எனக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. நான் விராட் கோலியின் வீக்னீசை பார்க்காமல் என்னுடைய பலத்தை நான் நம்பினேன்".
"என்னுடைய பலத்திற்கு தகுந்த மாதிரி நான் பந்து வீசி விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், விராட் கோலிக்கு எதிராக நாங்கள் எந்த ஒரு ஸ்பெஷல் திட்டத்தையும் தீட்டவில்லை. எங்களுடைய பயிற்சியாளர் டெல்லியில் அதிரடியாக ஆட விரும்புவார்கள். எனவே உங்களுடைய பந்துவீச்சை கட்டுக்கோப்பாக ஒரே மாதிரி வீசுங்கள் என்ற ஐடியா மட்டும் தான் கொடுத்தார்".
"எங்கள் இன்னிங்ஸ் முடிந்தவுடன் நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றோம். அப்போது விராட் கோலி அங்கு நின்று கொண்டிருந்தார். உடனே விராட் என்னை பார்த்து அபாரமாக பந்து வீசினீர்கள் என்று என்னை வாழ்த்தி கைகுலுக்கினார். உடனே நான் உங்களிடம் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அதன் பிறகு மதியநேர உணவு இடைவெளியின் போது டெல்லி அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று நான் விக்கெட் எடுத்த பந்து உடன் விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்".
"அப்போது கோலி, என்னை அவுட் ஆக்கிய பந்துதானா இது என்று கூறி நகைச்சுவையாக கேட்டு சிரித்தார். இந்தப் போட்டிக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையை மாறியதாக நினைக்கின்றேன். எனக்கு 300 மிஸ்டு கால் மற்றும் 200- 300 மெசேஜ்கள் என் மொபைலுக்கு வந்தது. என்னுடைய இன்ஸ்டாகிராமை நான் பிரைவேட் செட்டிங்ஸ்க்கு மாற்றி இருந்தேன். ஆனால் ரசிகர்களிடமிருந்து அதிகளவு அன்பு கிடைத்திருக்கிறது. வெறும் 700 பேர் மட்டுமே என்னை பின்தொடர்ந்து இருந்தார்கள். தற்போது அது ஆயிரக்கணக்கில் செல்கிறது" என்று சங்வான் தெரிவித்துள்ளார்.