மும்பை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி சதம் அடித்துள்ளதை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து கோலி 100 சதங்களை எட்ட முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "விராட் கோலி அடுத்தடுத்து சதங்கள் அடித்துள்ளார். அவர் சதங்களின் சக்கரவர்த்தி. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 16 சதங்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், 2027 உலகக் கோப்பை உட்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. எனவே அவர் 100 சதங்களை எட்ட முடியும்."

"இந்த முறை அவர் சற்றே மாறுபட்ட அணுகுமுறையில் பேட் செய்தார். இது கிளாசிக் ஆட்டம்தான், ஆனால் அவர் வேறு ஒரு விளையாட்டுத் திட்டத்துடன் ஆடினார். ராஞ்சியில் காணப்பட்ட 7 சிக்ஸர் ஆக்ரோஷம் இதில் இல்லை. இது சற்று நிதானமானது, அதே சமயம் பயனுள்ளது."
"விராட் கோலியின் சதத்தை விட ருதுராஜ் கெய்க்வாட்டின் சதம் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. அவருக்கு ஒரு சரியான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விவாதித்திருந்தோம். நீங்கள் அவரை நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கிறீர்கள், அது துணை கேப்டனின் இடம். அதற்கு அவர், நான் ஒரு சதம் அடித்துவிட்டேன்' என்று சொன்னது போல இருந்தது."
"அவர் ஆதிக்கச் சக்தியாக விளையாடினார். அவருக்கு சதம் அடிப்பது மிகவும் முக்கியமானது. மேலும் அவர் அனைவரின் மனதையும் குளிர்விக்கும் ஒரு சதத்தை அடித்தார். இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியவுடன் ருதுராஜ் கெய்க்வாட்டின் உடனடி எதிர்காலம் குறித்த பெரிய கேள்வி எழும், ஆனால் அது அவரது கட்டுப்பாட்டில் இல்லை."
ருதுராஜ் கெய்க்வாட் 83 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். விராட் கோலியுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த அவர், மார்கோ ஜான்சனின் பந்தில் டோனி டி சோர்சியிடம் டீப் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.