மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களும் ஆர் சி பி அணியின் முதுகெலும்பமான விராட் கோலி அந்த அணியிலிருந்து விலகப் போகிறார் என்று செய்தி வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்ற நிலையில், அதனை கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இதனால் ஆர்சிபி மீது கரும்புள்ளி விழுந்தது. இதனால் மனமுடைந்த விராட் கோலி அந்த அணியை விட்டு விலகப் போகிறார் என்று கூறப்பட்டது. இதற்காக ஆர் சி பி அணியின் விளம்பரம் ஒன்றில் நடிக்க விராட் கோலி மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆர் சி பி வீரர் முகமது கைஃப், விராட் கோலி ஆர் சி பி விட்டு எங்கும் செல்ல மாட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசியவர், பலரும் விராட் கோலி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விடுவாரா என்று கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை.
விராட் கோலி பலமுறை சத்தியம் செய்திருக்கிறார். அவருடைய முதல் மற்றும் கடைசி போட்டி ஆர்சிபிக்காக மட்டும்தான். அவர் இந்த சத்தியத்தை மீறமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால் சிலர் ஏதோ விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் விராட் கோலி கையெழுத்து இட மறுத்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மொத்தம் இரண்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஒன்று அணியிடம் ஒப்பந்தம் மேற்கொள்வது. இன்னொன்று அணி தொடர்பான நிறுவனங்களுக்காக விளம்பர ஒப்பந்தம் போடுவது. தற்போது ஆர் சி பி அணி வேறு ஒரு நிறுவனத்திற்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் விளம்பர ஒப்பந்தங்களில் விராட் கோலி கையெழுத்திடாமல் இருந்திருப்பார். புதிய உரிமையாளர் வருகிறாரா என அவர் காத்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை மாற்றம் நிகழ்ந்தால் அதன் பின் புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நடைபெறும். ஆனால் இது எல்லாம் திரை மறைவுக்கு பின் நடக்கும் காட்சிகள். அது தொடர்பாக நமக்கு பெரிய அளவிலான தகவல்கள் தெரியாது.
எனினும் விராட் கோலி அந்த ஒரு நிகழ்வுக்காக தான் காத்திருக்கிறார். தவிர ஆர்சிபி விட்டு அவர் செல்ல மாட்டார். விராட் கோலி தற்போது தான் ஆர் சி பி அணிக்காக கோப்பையை பெற்று கொடுத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் 650 ரன்கள் மேல் அடித்திருக்கிறார். டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று இருக்கிறார். 2023 50 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று இருக்கிறார். என்னை கேட்டால் அவர் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார். இதனால் விராட் கோலி விரைவில் ஓய்வு பெற மாட்டார் என்று முஹமது கைப் கூறியுள்ளார்.