லீட்ஸ்: விராட் கோலி ஓய்வை அறிவித்த நிலையில், இனி யாரும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க மாட்டார்கள் என்றும், விராட் கோலியுடன் டெஸ்ட் போட்டி வடிவம் அதன் முக்கியத்துவத்தை இழக்கும் என்றும் கூறினார்கள் அவருடைய ரசிகர்கள். மேலும், மக்கள் இனி அதிக அளவில் போட்டிகளைப் பார்க்க மாட்டார்கள் என்றும் அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
ஆனால், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் போட்டி நடக்கும் ஹெடிங்லே மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து காணப்பட்டனர். இது டெஸ்ட் போட்டிக்குக் கிடைக்கும் வரவேற்பைச் சுட்டிக்காட்டும் நிலையில், விராட் கோலி ஓய்வு பெற்றால் இனி யாருமே பார்க்க மாட்டார்கள் எனச் சொன்னவர்களைப் பலரும் கேலி செய்து வருகிறார்கள்.

இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்குப் பிறகு விராட் கோலிதான் இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தார். 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் உச்சத்தில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரன்களைக் குவித்து வியப்பை ஏற்படுத்தி வந்தார்.
ஆனால், அதன் பிறகு அவரது ஃபார்ம் சரிந்தது. இந்த நிலையில், அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த மாதம் ஓய்வை அறிவித்தார். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வு பெற்றிருக்கிறார். அவர்களுக்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஷ்வினும் ஓய்வு பெற்றிருந்தார்.
இப்படி முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இனி டெஸ்ட் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்காது என விராட் கோலியின் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர். முக்கியமாக, விராட் கோலி ஓய்வு பெற்றால் டெஸ்ட் போட்டி என்ற வடிவமே அழிந்துவிடும் என்கிற ரீதியில் அவர்கள் பல்வேறு சோகப் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். அது பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கு சுமார் 15,000 ரசிகர்கள் வரை நேரில் வந்திருப்பதை சுட்டிக்காட்டி, விராட் கோலியின் ரசிகர்களைத் திருப்பித் தாக்கி பதிலடி கொடுத்து இருக்கின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரின் ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. கே.எல். ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாய் சுதர்சன் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.