மும்பை: விராட் கோலி ஏன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில், பிசிசிஐயின் கடுமையான விதிமுறைகளால் அவர் அதிருப்தியடைந்தே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் என ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் படுமோசமாக விளையாடினார்கள். ஒட்டுமொத்த இந்திய அணியும் சொதப்பியது. அதனால் அந்தத் தொடரில் இந்திய அணி 3-1 எனத் தொடரை இழந்தது.

அதன் முடிவில் பிசிசிஐ இந்திய அணிக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது. இனி வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது தங்கள் விருப்பத்தின்படி இருக்க முடியாது என அறிவுறுத்தும் வகையில், வீரர்கள் உதவியாளர்களை அழைத்துச் செல்லக்கூடாது, குடும்பத்தினரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு சந்திக்க முடியும், குடும்பத்தினருக்கும், உதவியாளர்களுக்கும் ஆகும் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தனர்.
மேலும் வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் ஒன்றாகவே மைதானத்திற்குப் பயணம் செய்ய வேண்டும், பயிற்சி முடிந்த பிறகும் போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் அனைவரும் ஒன்றாகவே பேருந்தில் மீண்டும் பயணம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஒரு வீரர் எத்தனை பைகளை எடுத்துச் செல்லலாம் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதில் பெரும்பாலான விதிகள் விராட் கோலியை குறிவைத்து அமல்படுத்தப்பட்டதாக அப்போதே சர்ச்சை எழுந்தது. ஏனெனில், விராட் கோலி எந்த ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கும் தனது குடும்பத்தினரையும், சில உதவியாளர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். அவர்களுக்கு என உடைமைகளையும் அவர் பிசிசிஐயின் செலவில் எடுத்துச் செல்கிறார். அவர் மட்டும் தனியாக காரில் செல்கிறார் என கூறப்பட்டது.
இதை அடுத்து தான் பிசிசிஐ இந்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதை விராட் கோலி விரும்பவில்லை. அதற்கு அடுத்து நடந்த கிரிக்கெட் தொடர்களின் போது, கேப்டன் ரோகித் சர்மா இது குறித்து பிசிசிஐ இடம் பேசினார். ஆனால் பிசிசிஐ அந்த விதிகளை தளர்த்த முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அதன் பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றதால், வீரர்கள் யாரும் இது குறித்து எதுவும் பேசவில்லை.
ஆனால், விராட் கோலி இந்த முடிவால் கடும் அதிர்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த ஏழு ஆண்டுகளாகவே அவர் தனது குடும்பத்தினருடன் தான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்குப் பயணம் செய்து வருகிறார். அது அவரது சிறந்த செயல்பாட்டுக்கும் உதவுவதாக அவர் நம்புகிறார். எனவே தனது விருப்பத்திற்கு மாறாக பிசிசிஐ இவ்வாறு செயல்பட்டதாக எண்ணிய அவர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவை அவர் ஏப்ரல் மாதத்திலேயே எடுத்து விட்டதாகவும், அப்போது பிசிசிஐ-யிடம் தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே 'நீங்கள் ஒரு மாத காலம் சிந்தித்து முடிவை அறிவியுங்கள்' என கூறியதாக ஒரு தகவல் உள்ளது. அது உண்மையா எனத் தெரியவில்லை.
ஆனால், விராட் கோலி ஏப்ரல் மாதத்திலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துவிட்டார் என்பது பல தரப்புகளிலும் கூறப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் விராட் கோலி ஓய்வை அறிவிக்கவில்லை. ஏனெனில், ஒருநாள் தொடர்கள் பெரும்பாலும் சிறிய தொடர்களாக இருக்கும். அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொடர் முடிந்து விடும்.