டெல்லி: விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு கௌதம் கம்பீர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதற்குக் கீழே ரசிகர்கள் தங்கள் கோபத்தைக் கொட்டி வருகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து மோத உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால், விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு தற்போது 36 வயது தான் ஆகிறது. விராட் கோலி 2027 வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் ரோகித் சர்மாவும் ஓய்வு பெற்றார். இரண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதற்கு முக்கிய காரணமே பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொடுத்த அழுத்தம் தான் எனப் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விராட் கோலி ஓய்வு குறித்து கௌதம் கம்பீர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "சிங்கத்தைப் போன்ற ஆர்வம் உடைய ஒரு மனிதர். உன்னை மிஸ் செய்வேன் சீக்கு" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'சீக்கு' என்பது விராட் கோலியின் செல்லப் பெயராகும்.
கௌதம் கம்பீரின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், பலரும் விராட் கோலி ஓய்வு பெறுவதற்குக் காரணமே நீங்கள் தான் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். "அவரை வெளியேற்றுவதற்கான அத்தனை வேலைகளையும் செய்து விட்டு இப்போது மிஸ் யூ' எனப் பதிவு வெளியிட்டு இருக்கிறார்" எனச் சிலர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிலரோ, இந்தப் பதிவை வெளியிடும்போது கௌதம் கம்பீர் சிரித்துச் சந்தோஷமாக இருந்திருப்பார் என மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்தியாவின் மூத்த வீரர்கள் மூவர் வரிசையாக ஓய்வை அறிவித்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே அஸ்வின் ஓய்வை அறிவித்தார். சமீபத்தில் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். இன்று விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.