லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி ஓய்வுபெற்ற நிலையில், அதற்கான முக்கிய காரணம் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். விராட் கோலி மனதளவில் ஓய்வாகவும், புத்துணர்ச்சியாகவும் இல்லாததே அவரது செயல்பாடு மோசமடைந்ததற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகவே இடைவெளி இல்லாமல் ஆண்டு முழுவதும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போட்டிகளுக்கு ஒளிபரப்பாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டி இருக்கிறது. அதனால் இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஒரு ஆண்டில் ஐபிஎல் தொடர் நடைபெறும் இரண்டு மாதங்களைத் தவிர்த்து, ஒன்பது அல்லது பத்து மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில் விராட் கோலி சில டி20 தொடர்கள் மற்றும் ஒருநாள் தொடர்களைத் தவிர்த்து வந்தார். ஆனாலும், அனைத்து டெஸ்ட் தொடர்கள், உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்கள் மற்றும் ஐபிஎல் என ஒரு ஆண்டில் சுமார் ஏழு எட்டு மாதங்களுக்குக் கிரிக்கெட் ஆடி வந்தார்.
இந்த காலகட்டத்தில் தான் விராட் கோலியின் பேட்டிங் செயல்பாடு சரிவை சந்தித்தது. முதலில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது தனக்கு பிடித்த டெஸ்ட் வடிவத்தில் இருந்தும் ஓய்வு பெற்று இருக்கிறார்.
அதிக போட்டிகளில் ஆடியது மனதளவில் கோலியை சோர்வடைய செய்திருக்கிறது என ஜெஃப்ரி பாய்காட் தற்போது சுட்டிக் காட்டியிருக்கிறார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இல்லை என்றால் இதுதான் நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி ஜெஃப்ரி பாய்காட் பேசுகையில், "இந்திய அணி அதிக அளவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் நிலையில், விராட் கோலிக்குக் குறைவான ஓய்வுதான் கிடைத்தது. அது அவரது மனதையும் உடலையும் சோர்வடைய செய்துவிட்டது. நீங்கள் எவ்வளவு திறமையான, அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இல்லாத நிலையில் சவால்களை எதிர்கொண்டால் நிச்சயம் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள்," என்று கூறி இருக்கிறார்.