மும்பை: இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், பிசிசிஐ அது குறித்து எந்தக் கவலையும் அடையவில்லை. மேலும், விராட் கோலி தான் ஓய்வு பெறப் போவதை பிசிசிஐ-யிடம் சில நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்டார்.
அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனால், அது ஒரு சம்பிரதாயத்துக்காகச் சொல்லப்பட்டதாகவே தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியோ, முன்னாள் வீரர்களோ ஓய்வு முடிவை திரும்பப் பெறுமாறு விராட் கோலியிடம் பேசவில்லை.

விராட் கோலியின் ஓய்வு முடிவை திரும்பப் பெற வைப்பதற்கு பிசிசிஐ உண்மையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் 'அவர் ஓய்வு பெற்றால் ஓய்வு பெற்றுக்கொள்ளட்டும்' என்ற முடிவில் தான் பிசிசிஐ அதிகாரிகள் இருந்துள்ளனர். இது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமித்தது, மூத்த வீரர்கள்ளான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப் படிப்படியாக அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என அப்போதே கூறப்பட்டது. ஆனால் அது சாத்தியமா? என பலரும் நினைத்தனர்.
ஆனால், தற்போது அது சாத்தியமாகியுள்ளது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பதவி ஏற்கும் முன்னரே, விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தனர். அதன் பின்பு ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருவரும் விளையாடி வந்தனர். ஆனால், டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தற்போது ஓய்வு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஒருவேளை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதே ஓய்வு பெறும் முடிவில் இருந்திருந்தால், அப்போதே தங்களது ஓய்வை அறிவித்திருப்பார்கள்.
ஆனால் அவர்கள் இருவருமே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது இது தொடர்பாக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இருவரும் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள்.
விராட் கோலி ஓய்வை அறிவிப்பார் என பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் தன் ஓய்வு முடிவை அறிவித்த போது, அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடலாம் என்பதை பிசிசிஐ அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. இதுதான் தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது.
விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்தவர், சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர். அவர் ஓய்வு பெறப் போவதாகக் கூறினார் என்றால், அது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து அவரிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.