டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னனாக விளங்கிய சேவாக்கின் மகன் ஆரியவீர் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து அசத்திருக்கிறார். இளையோருக்கான கூச் பிகார் கோப்பை தொடரில் மேகாலிய அணிக்கு எதிராக டெல்லி அணி இன்று பல பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேகாலிய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து டெல்லி அணிக்காக களமிறங்கிய சேவாக்கின் மகனான ஆரியவீர் தந்தை போலவே தொடக்க வீரராக களம் இறங்கி மேகாலயாவின் பந்துவீச்சை சிதறடித்திருக்கிறார்.

தந்தை சேவாக் டெஸ்ட் கிரிக்கெட் இருந்தாலும் சரி டி20 கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி ஒரே மாதிரி ஆடி அதிரடியாக ரன்களை குவிப்பார். அதேபோல் அவருடைய மகன் ஆரியவீர் மொத்தமாக 34 பௌண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் 229 பந்துகளில் அவர் இரட்டை சதம் விளாசி இருக்கிறார். ஆரியவீர் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 468 ரன்கள் குவித்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சேவாக்கின் மகனான ஆர்யவீர் வினோ மான்காட் கோப்பையில் மணிப்பூர் அணிக்கு எதிராக 49 ரன்கள் விளாசி டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.
தனது மகன் ஆரியவீர் குறித்து ஏற்கனவே பேசி இருக்கும் சேவாக் தமது மகனுக்கு 16 வயதாகிறது. அவர் ஐபிஎல் தொடரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தற்போது இருந்து தீவிரமாக உழைத்து வருகிறார். இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் வரப்பிரசாதமாக இருந்திருக்கிறது. முன்பெல்லாம் யாரும் ரஞ்சிப் போட்டியை கவனிக்க கூட மாட்டார்கள்.
இதனால் இந்திய அணிக்கு தகுதி பெற கடினமாக இருக்கும். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் ரசிகர்கள் உங்களை கவனிக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அணியில் விரைவாக இடம் கிடைக்கிறது என்று ஷேவாக் பாராட்டி இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஐபிஎல் சீசனில் சேவாக்கின் மகன் ஏலத்தில் பங்கேற்கவில்லை. ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்களின் மகன்களைத் தொடர்ந்து தற்போது சேவாக்கின் மகனும் அதிரடியாக விளையாடி சிறு வயதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.