டெல்லி : இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடிய ஆட்டம் மோசமாக இருந்தது. ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா போன்ற வீரர்கள் பந்துகளை வீணடித்து சோதித்தனர்.
டி20 போட்டியிலும் கூட இப்படித்தான் மெதுவாக ஆடுவீர்களா? என ரசிகர்களே கூட தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், தன் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன முன்னாள் வீரர் சேவாக், இளம் வீரர்கள் டி20 போட்டியிலும் நிதான ஆட்டம் ஆடுவதை மாற்ற வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய இளம் வீரர்கள் கொண்ட அணி ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் காலிறுதிப் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் பேட்டிங்கில் இந்திய வீரர்களில் இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர்.
துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்களும், ஃபினிஷர் ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்களான ருதுராஜ் கெயிக்வாட் 25, திலக் வர்மா 2, ஹிதேஷ் சர்மா 5, சிவம் துபே 25 ரன்கள் எடுத்தனர். அவர்கள் யாருமே அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்கவில்லை.
இரண்டே வீரர்களால் மட்டுமே இந்தியா 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நேபாள அணி இந்திய அணிக்கு ஈடு கொடுத்து ரன் குவித்தது. எனினும், ரவி பிஷ்னோய் சரியான நேரத்தில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தியதால் இந்தியா தலை தப்பி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங்கை விமர்சனம் செய்து இருக்கிறார் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக். அவர் இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய ரிங்கு சிங் மற்றும் முன்பு டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிரடியாக ரன் குவித்து இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை குறிப்பிட்டு அவர்களைப் போல வீரர்கள் தான் அணிக்கு தேவை என கூறி உள்ளார்.
சேவாக் இது பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நம் அணியில் ஒரே கியரில் வீரர்கள் ஆடுகிறார்கள். ஆனால், நாம் டாப் கியரில் அடித்து ஆடும் அதிரடி வீரர்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக டி20 போட்டிகளில். நாம் ஆபத்தான அணியாக மாற வேண்டும் என்றால் ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் போன்ற வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும்" என கூறி இருக்கிறார்.