ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிடுவார்.. அடுத்து வரப்போவது இவர்தான்.. இந்திய ஓப்பனர் பற்றி சேவாக் கணிப்பு
டெல்லி: தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்றும், அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக யார் களம் இறங்கப் போவது என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பேசி இருக்கிறார்.
ஜெய்ஸ்வால் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை வாய்ந்தவர் என்றாலும், தற்போது அணியில் அவருக்கான இடம் காலியாக இல்லை என்று சேவாக் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் அதில் ஒரு சதம் அடித்துள்ளார். கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தனது கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வாலுக்கு வெள்ளை பந்து (ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருந்தாலும், வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார்.

ரோஹித் ஓய்வுக்கு பின் ஜெய்ஸ்வால்
இதுகுறித்து விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேவாக், "தற்போது இந்திய அணியில் துவக்க வீரருக்கான இடம் காலியாக இல்லை. சுப்மன் கில் கேப்டனாக உள்ளார், ரோஹித் சர்மாவும் விளையாடி வருகிறார். ரோஹித் சர்மா ஓய்வு பெற்றவுடன், ஜெய்ஸ்வால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை உங்களால் பார்க்க முடியும். ருதுராஜ் கெய்க்வாட் அவருக்கு போட்டியாளராக இருக்கலாம். ஆனால் 3 துவக்க வீரர்களை தேர்வு செய்தால், அதில் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக இடம் பெறுவார்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "முன்னணி வீரர்களான ரோஹித் அல்லது கில் இல்லாத போது மட்டுமே ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். மோசமான ஆட்டத்தால் அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இஷான் கிஷனும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இல்லை. அவர் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தவர் என்பதால் அவரும் பரிசீலனையில் உள்ளார். ஆனால் ஜெய்ஸ்வால் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியானவர் என்பதால், அவரை அனைத்து போட்டிகளிலும் பார்க்கவே நான் விரும்புகிறேன்" என்றார்.
மனோஜ் திவாரி ஆதரவு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரியும் சேவாக்கின் இந்த கருத்தை முழுமையாக ஆதரித்து பேசினார். அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு, இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக ஜெய்ஸ்வால் தான் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சாய் சுதர்சன், இஷான் கிஷன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு முன்பாக ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
மனோஜ் திவாரி பேசுகையில், "எனது பட்டியலில் ஜெய்ஸ்வால் தான் முதல் இடத்தில் உள்ளார். அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு 2 மூத்த வீரர்கள் ஓய்வு பெறக்கூடும். அதற்கு முன்பே கூட அவர் தேர்வு செய்யப்படலாம். ஒருவேளை அது நடக்கவில்லை என்றாலும், அந்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு தேர்வு செய்யப்பட வேண்டிய முதல் பெயர் ஜெய்ஸ்வாலாகத்தான் இருக்க வேண்டும். அதன் பிறகே சாய் சுதர்சன், இஷான் கிஷன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை நாம் வரிசைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தர்மசாலாவில் தொடங்குகிறது. காயம் காரணமாக விலகிய விராட் கோலிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜெய்ஸ்வாலுக்கு, இந்த தொடரில் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
