டெல்லி : இந்திய திருநாட்டை பாரத் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாரத் என்ற பெயர் வேண்டும் என்று ஒரு தரப்பினரும்
இல்லை இந்தியா என்ற பெயர்தான் வேண்டும் என்று மறுதரப்பினரும் தற்போது சமூக வலைத்தளத்தில் அடித்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சேவாக், ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டு உள்ளார்.

அதில் இனி இந்திய அணியின் பெயரை பாரத் என மாற்றங்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், எப்போதுமே ஒரு பெயர் நமக்கு பெருமையை விதைக்க வேண்டும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் பாரத நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் நமக்கு வழங்கப்பட்டது.
இதனால் நமது பெயரை பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும். இதை நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜெர்சியில் இந்தியாவுக்கு பதில் பாரத் என அச்சிடுங்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை நான் வலியுறுத்துகிறேன் என்று ஷேவாக் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர் 1996 உலகக் கோப்பை போட்டியின் போது நெதர்லாந்து அணி இந்தியாவுக்கு வந்து ஹாலந்து என்ற பெயரில் போட்டியில் விளையாடினார்கள். ஆனால் 2003 ஆம் ஆண்டு நாங்கள் அவர்களை சந்திக்கும்போது நெதர்லாந்து என பெயரை மாற்றி இருந்தார்கள். தற்போது வரை அந்தப் பெயரில் தான் அந்த அணி இருக்கிறது.
இதேபோன்று பர்மா என்ற ஆங்கிலேயர்கள் கொடுத்த பெயரை தற்போது மியான்மார் என அந்த நாடு மாற்றி இருக்கிறது. இதேபோன்று பல நாடுகளும் தங்களுடைய உண்மையான பெயருக்கு சென்றிருக்கிறார்கள் என்று ஷேவாக் கூறியுள்ளார். சேவாக்கின் இந்த கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் அளித்துள்ள பதிலில் அப்போது இவ்வளவு நாள் இந்தியா என்ற பெயரில் விளையாடினார்கள் அது உங்களுக்கு பெருமையை அளிக்கவில்லையா என்று கேட்டுள்ளார்.