
நல்ல இதயம்
ஷேவாக் கூறியுள்ளதாவது: டோணி அப்படி செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. டோணி நல்ல இதயம் படைத்த மனிதர். மூத்த வீரர்களை அவர் மதித்தார். டோணி முதன் முதலாக கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் அவரது தலைமையின் கீழ் ஆடிய மூத்த வீரர்களான நாங்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கினோம். அந்த ஆலோசனைகளை களத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளார். இதனால் நமது அணி அவரது தலைமையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டது.

முன்கூட்டியே
டோணியுடன் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. இவையெல்லாம் ஊடகங்களின் யூகங்கள். ஒருவேளை டோணியுடன் எனக்கு மோதல் இருந்திருந்தால், நான் இன்னும் முன் கூட்டியே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பேன். எனவே அணியிலிருந்து நான் நீக்கப்படுவதற்கு டோணிதான் காரணம் என்று கூறப்பட்ட கருத்து தவறு.

கேப்டனால் நீக்க முடியாது
கேப்டனாக இருந்தாலும் மூத்த வீரராக இருந்தாலும், இளம் வீரராக இருந்தாலும் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான அளவு கோல் ஒருவரது ஆட்டத்திறன் மட்டுமே. தேர்வாளர்களே அளவுகோலை தீர்மானிக்கின்றனர். வீரர்களைத் தேர்வு செய்வதும், நீக்குவதும் கேப்டன் கையில் கிடையாது. கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான் அந்த நடைமுறை இருந்தது.

கங்குலி காலம்
கங்குலிக்கு பிறகு, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே கேப்டன்களாக பதவிவகித்தபோதே அந்த நிலை மாறிவிட்டது. நன்றாக ஆடுபவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் தேர்வாளர்கள் நோக்கம். 2007 உலகக் கோப்பையில் நானும், டோணியும் சேர்ந்து ஆடினோம். நான் கேப்டனாக விரும்பினேன் என்று கூறுவது முற்றிலும் தவறு. டோணி கேப்டனானபோது டி20 உலகக் கோப்பையில் அவருக்குக் கீழ் நான் விளையாடினேன். டி20 உலகக் கோப்பையை நாம் வென்றோம்.

பதவி ஆசையில்லை
டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு நடைபெறும் போது நான் அப்போது தலைமை அணித் தேர்வாளரிடம் எனக்கு கேப்டனாகவோ, துணைக் கேப்டனாகவோ விருப்பம் இல்லை என்று கூறினேன். வேண்டுமென்றால் நீங்கள் அப்போதைய அணி தேர்வாளரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திடம் இதனை கேட்டுக்கொள்ளலாம். டோணியிடமும் கேட்டுப் பாருங்கள், எனக்கு கேப்டன் பதவி மீது ஆசையில்லை.

டோணியால் ஜெயிக்கவில்லை
இந்தியா டோணி தலைமையில் உலக கோப்பையை வென்றபோது, நாம் வென்றது கேப்டன்சியினால் அல்ல, அணி நன்றாக விளையாடியதால்தான் என்று கூறியிருந்தேன். என்னுடைய பேட்டி சரிதான் என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள். நான் டோணியை சிறுமைப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த பெருமையையும் கேப்டனுக்கே கொடுக்காதீர்கள், அணிக்கும் கொடுங்கள் என்றுதான் கூறினேன்.

எல்லோருக்கும் பலன்
புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் இன்று வரை டோணிதான் இந்தியாவின் சிறந்த கேப்டன். ஆனால் ஒருவருக்கு மட்டுமே பெருமையைச் சேர்ப்பது நல்லதல்ல, கோப்பைகளை வென்றதில் மற்றவர்களின் பங்களிப்பும் பேசப்படவேண்டும்.

ஒரு போட்டியில் ஆடினார்
நான் 2011 உலக கோப்பையின் முதல் போட்டியில் 175 ரன்கள் எடுத்தேன். டோணி பைனல் போட்டியில் 92 ரன்கள் எடுத்தார். இடையே நான் ஓரிரு ஆட்டங்களில் நன்றாக பங்களிப்பு செய்தேன். ஆனால் டோணியால் பிற போட்டிகளில் சரியாக ஆடமுடியவில்லை. கவுதம் கம்பீர் ரன்கள் எடுத்தார், யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது பெற்றார். நாளை யாராவது யுவராஜ் சிங்கினால்தான் உலகக் கோப்பையை நாம் வென்றோம் என்று கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

டீம்தான் காரணம்
வெற்றி அனைத்துக்கும் கேப்டனுக்கே பெருமை சேர வேண்டுமென்றால், தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு அணியை கேப்டன் தான் வெற்றி பெறவோ, தோல்வியுறவோ செய்கிறார் என்று கூறுவது மிகவும் தவறு. கேப்டனைக் குறை கூறுவது தவறு. ஒரு கேப்டன் என்பவர் குறைந்தது அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறார். அவ்வளவுதான்.

சொத்தை டீம்
வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி கேப்டன் டோணியினால் அல்ல. தோல்விக்குக் காரணம் நமது பேட்டிங் மற்றும், பவுலிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே. எவ்வளவு நாளைக்குத்தான் டோணி மட்டுமே நமக்கு போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுக்க முடியும். இவ்வாறு ஷேவாக் கூறினார்.


Click it and Unblock the Notifications











