அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கும் சூழலில் சேவாக்கின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்களும், இந்தியா 365 ரன்களும் எடுத்தன.
இந்தியா 160 ரன்கள் முன்னிலைப் பெற, தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நிறைவுபெற, 4வது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிய, இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மொத்தமாகவே 5 நாட்களில் முடிந்துவிட்டது. பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் புகார் எழுப்பப்பட்டது.
கெவின் பீட்டர்சன், மைக்கேல் வாகன் உட்பட பல முன்னாள் வீரர்கள் பிட்சின் தரம் குறித்து கேள்வி எழுப்பினர். தவிர, அகமதாபாத் பிட்சை கேலி செய்யும் விதமாக, மைக்கேல் வாகன், களி மண் நிறைந்த களத்தில் நின்று பேட்டிங் செய்வது போல் வெளியிட்ட புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதேசமயம், ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் இந்தியா வென்றது, இதற்கான புகழ் அனைத்தும் ஸ்பின்னர்களையே சேரும் என்று மற்றொரு தரப்பினர் எதிர் வாதத்தை முன் வைத்தனர்.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியிலும் தோற்று இங்கிலாந்து முற்றிலும் சரண்டர் ஆகிவிட்டது. போட்டி முடிந்த பிறகு, முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக், தனது ட்விட்டரில், மனித மூளை படம் ஒன்றை பதிவிட்டு, "அற்புதமான டெஸ்ட் தொடர் வெற்றிக்காக இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். அகமதாபாத்தில் இங்கிலாந்து இழக்கவில்லை. அவர்கள் இங்கே இழந்துவிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.
பிட்சை குறை சொல்லாமல், ஒழுங்காக மூளையை பயன்படுத்தி, வெற்றிப் பெறுவது குறித்து யோசித்திருந்தால் இங்கிலாந்து வெற்றிப் பெற்றிருக்கும் என்பதை குறிப்பிடும் நோக்கில் சேவாக் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.