டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய சீனியரான சேவாக் தமக்கு அந்த தலைவலியே வேண்டாம் என கூறியிருக்கிறார். ஷேவாக் கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதை அடுத்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் மெண்டர் மற்றும் பயிற்சியாளராக 2018 ஆம் ஆண்டு வரை சேவாக் பதவியில் இருந்தார். இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு சேவாக் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அவர் அந்த பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கடுப்பான சேவாக் அதிலிருந்து இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்ததே கிடையாது. இந்த நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து சேவாக், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு தான் விண்ணப்பிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டும் என்றால் நிச்சயம் அது குறித்து ஆலோசனை செய்வேன். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றால் கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நான் என்ன செய்தேனோ, அதை நான் திரும்பி செய்ய வேண்டியதாக இருக்கும்.
இந்திய அணிக்காக 15 ஆண்டுகள் நான் விளையாடிருக்கிறேன். அப்போது எனது வீட்டில் நான் வருடத்திற்கு எட்டு மாதம் வரை இருந்தது கிடையாது. என்னுடைய குழந்தைகள் தற்போது 14, 16 வயதாகி இருக்கிறது. அவர்களுக்கு நான் தேவைப்படுவேன். இருவருமே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். ஒருவர் ஆப் ஸ்பின்னர், இன்னொருவர் என்னைப்போல் தொடக்க வீரர்.
அவர்களுக்கு கிரிக்கெட் குறித்து நான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட நான் விரும்புகிறேன். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றால் அது நிச்சயம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 8 மாதங்கள் நான் இந்திய அணியுடன் இருக்கும் நிலை வந்தால், என்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாது.இதுவே ஐபிஎல் அணியின் பயிற்சி அல்லது மென்டராக பதவி கிடைத்தால் நிச்சயம் அந்த பணியை என்னால் செய்ய முடியும்.
ஏனென்றால் வருடத்தில் இரண்டு மாதம் தான் அதற்கு செலவிட வேண்டும் என்று ஷேவாக் கூறியுள்ளார். ஷேவாக் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் அணி செல்லவே இல்லை. 17 ஆண்டு கால ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி இரண்டு முறை தான் பிளே ஆப்க்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று சேவாக் முதன்முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் சில தேர்வு செய்யப்பட இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், சேவாக்கை தான் தேர்வு செய்ய வேண்டும் என ஒற்றை காலில் நின்றார். ஆனால் சிஎஸ்கே அணியின் நிர்வாகியான சந்திரசேகர் தான் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்தார்.
ஷேவாக் தமக்கு பயிற்சியாளர் பொறுப்பு தலைவலி என்று நினைத்தாலும் கம்பீர் இந்த பொறுப்புக்கு வந்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். கம்பீர் வருகையின் மூலம் இந்திய அணி வீரர்கள் நல்ல அனுபவத்தையும் தெளிவையும் பெறுவார்கள் என்று சேவாக் கூறினார். இளம் வீரர்களுக்கு கம்பீர் நல்ல துணையாக இருப்பார் என்றும் ஷேவாக் தனது பேட்டியில் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.