டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் குறித்து நம்ப முடியாத தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை உறைய வைத்துள்ளது. சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 20 ஆண்டுகள் திருமண வாழ்வை அவர்கள் முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2004 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரை, ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தி இருப்பதாகவும் முதற்கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன.

இருவரும் விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீப காலமாக இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் வரிசையாக விவாகரத்து செய்வதாக அறிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் பிரிந்து இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோரும் தங்கள் மனைவிகளை பிரிந்தனர். அந்த வரிசையில் ஜாம்பவானான வீரேந்தர் சேவாக் பெயரும் சேர உள்ளது.
அவர் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெளியிட்ட புகைப்படங்களில் அவரது மனைவி இடம் பெறவில்லை. அதற்கு முன்பு இருந்தே அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆர்த்தி அஹ்லாவத் நியூ டெல்லியை சேர்ந்தவர். அவரும் சேவாக்கும் 2000 மாவது ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.
2004 ஆம் ஆண்டு முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இல்லத்தில் அவர்களது திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு விரேந்தர் சேவாக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். அதன் பின் அவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
அவரது மகன் ஆர்யவீர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். சமீபத்தில் அவர் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு இருந்தார். இப்படி எல்லாம் நன்றாக செல்வதாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் அவரது வாழ்வில் புயல் வீசிக் கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.