சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது வழங்கும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவை இரண்டுமே, விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிகப்பெரிய விருதுகள். இந்த விருதுகளுக்கு தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டுபிடிப்பது விருது குழுவின் தலையாய பணியாகும்.
ஓய்வு பெற்ற நீதிபபதி சி.கே.தாக்கர் இக்குழுவின் தலைமை பொறுப்பிலுள்ளார். வீரேந்திர சேவாக், பி.டி.உஷா, குத்துச்சண்டை வீரர் முகுந்த் கில்லேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பத்திரிகையாளர்கள் எம்.எஆர்.மிஸ்ரா, எஸ்.கண்ணன், சஞ்சீவ்குமார், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி, விளையாட்டு துறை நிர்வாகி அனில் கண்ணா, இந்திய விளையாட்டு அத்தாரிட்டி டிஜி இன்ஜிதி ஸ்ரீவஸ்தவா மற்றும் ராஜ்வீர் சிங் ஆகியோர் 12 பேர் கொண்ட இக்குழுவில் இடம் பிடித்துள்ளனர். ஆகஸ்ட் 3ம் தேதி இக்குழு கூடி, இவ்வாண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அறிவிக்கிறது.
சேவாக், இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், ரவி சாஸ்திரி அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.