மும்பை: இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக், குறித்து பல முன்னணி வீரர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.
வீரர்கள் கூறியதாவது:
நீங்கள் எவ்வளவு சிறப்பான மற்றும் அனுபவம்மிக்க பவுலராக இருந்தாலும் சரி, உங்கள் எண்ணத்தை சேவாக் சில நிமிடங்களில் மாற்றிப்போட்டுவிடுவார்- ஆஸி. அதிவேக பந்து வீச்சாளர் பிரெட் லீ.

விவ் ரிச்சர்ட்ஸ் ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட்டில் பொழுதுபோக்கு போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால், சேவாக் வந்த பிறகு நிலைமாறியது. அவர் பொழுதுபோக்கின் ராஜா- பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜா.
90 ரன்களுக்கு மேல் எடுத்த பிறகு, எப்படி பதற்றமின்றி ரன் குவிப்பது என்பதை நான் சேவாக்கிடமிருந்துதான் கற்க வேண்டும்- மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
எப்போதுமே நான் இருக்கும் அணியில் சேவாக் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் நான் அவர் பேட் செய்வதை பார்க்கவே ஆசைப்படுகிறேனே தவிர, அவருக்கு பந்து வீச ஆசைப்படவில்லை- சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே.
பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லை என்று ஒரு காரணத்தை கூறுவது வாடிக்கை. ஆனால், சேவாக் போன்றவர்கள் ஃபார்மை எப்போதும் இழப்பதில்லை- ஆஸி. பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி.
நான் பார்த்த அளவில், கணிக்க முடியாத பேட்ஸ்மேன் சேவாக்- ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்.
பயப்படாமல் ஆடும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் உலகின் சிறந்த வீரர் சேவாக்தான்- இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.
298 ரன்களில் நிற்கும்போதும், சிக்சர் விளாசுவதெல்லாம், கற்பனை செய்து பார்க்க முடியாதது. பெரும் ஜீனியசாக இருந்தால்தான் அது முடியும்- பாக். பவுலர் வக்கார் யூனிஸ்.