மும்பை: 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் டிராவானதால், இந்திய அணி பவுல் அவுட் முறையில் வெற்றிபெற்றது. இந்த பவுல் அவுட்டின் போது கேப்டன் தோனிக்கு அனுபவ வீரர் சேவாக் அட்வைஸ் வழங்கியதை பற்றி கூறியுள்ளார்.
பிரபல வர்ணனையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கவுரவ் கபூர் Breakfast With champions என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் இந்திய அணியின் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சேவாக் பங்கேற்று பல்வேறு அனுபவங்களை கூறியுள்ளார். அதில் 2007ஆம் நடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றிபெற்றது பற்றி சில ரகசியங்களை சேவாக் பகிர்ந்துள்ளார்.

பவுல் அவுட் முறைக்கு வீரர்களை தேர்வு செய்தது பற்றி சேவாக் பேசுகையில், பவுல் அவுட்டில் வெற்றியாளரை தீர்மானிப்பார்கள் என்று தெரிந்த பின், நேரடியாக தோனியிடம் சென்று, நான் முதலில் வீசுகிறேன் என்று கூறினேன். ஏனென்றால் நிச்சயம் ஸ்டம்புகளில் நேராக பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் தோனியிடம், பந்துவீச்சாளர்களிடம் மட்டும் பந்தை கொடுக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தேன். அப்போது தோனி ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அவர்கள் ரன் அப் செய்ய வேண்டுமென்பதால், சரியாக ஸ்டம்புகளை வீழ்த்த முடியாது என்றேன். அதற்கேற்ப நான், ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா பவுல் அவுட்டில் வீசினோம். இதற்காக பயிற்சியின் போதே நாங்கள் விவாதித்து பவுல் அவுட் செய்வதற்கான பயிற்சியையும் தொடங்கினோம். ஆட்டம் டிராவில் முடிந்தால், பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்படும் என்று தெரிந்த பின், பயிற்சியை தொடங்கினோம். இதற்கான அறிவுரையை பயிற்சியாளர்களாக இருந்த வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ராபின் சிங் தான் அளித்தார்கள்.
பவுல் அவுட் பற்றி பயிற்சியாளர்கள் பேசும் போது, அனைவரும் டி20 கிரிக்கெட்டில் எப்படி ஆட்டம் டிராவில் முடியும் என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் பயிற்சி என்று சொன்ன பின், உடனடியாக பந்தை எடுத்துக் கொண்டு வீசத் தொடங்கினோம். அந்த பயிற்சியின் போது நான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அதிக முறை ஸ்டம்புகளை தகர்த்தோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பவுலர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்களே சிறப்பாக செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியிலும் தோனிக்கும் பவுல் அவுட் திட்டத்திற்கும் சம்மந்தமே இல்லாதது போல் சேவாக் பேசியுள்ளார். ஆனால் பவுல் அவுட் முறை கொண்டு வந்த போது, இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று தோனியே முதலில் அறிவுறுத்தியதாக உத்தப்பா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனால் சேவாக் பேசியுள்ள கருத்துகள் மீண்டும் தோனி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.