டெல்லி:இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பற்றி, சேவாக்கின் ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது.
கடந்த மே மோதம் நடைபெற்ற ஐபிஎல் பைனலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான அந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் மும்பை அணி வீரரான பும்ரா வீசிய 19வது ஓவரில், முக்கிய கேட்சினை குவின்டன் டி காக் தவற விட்டார்.

அதற்காக வருத்தப்படாத பும்ரா, ஓவர் முடிவில் டி காக்கிடம் சென்று, சிரிப்பை வெளிப்படுத்தினார். விக்கெட்டை தவறவிடும் போது சாதரணமாக எடுத்துக் கொண்டு எவ்வித கோப தாபங்களையும் வெளிபடுத்தாமல் பொறுமையுடன் சிரிப்பை வெளிப்படுத்தியது அப்போதே பாராட்டுகளை அள்ளியது.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. இந்திய வீரர் பும்ராவின் பந்துவீச்சு, தென் ஆப்ரிக்க தொடக்க ஆட்டக்காரர்களை நீண்ட நேரம் களத்தில் இருக்க விடவில்லை.
பும்ராவின் அனல் பறந்த பந்துகளை டி காக் சரியாக எதிர்கொள்ள முடியாமல் டி காக் திணறினார். 3வது ஓவரில் தனது விக்கெட்டையும் அவர் இழந்து வெளியேறினார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி விரேந்திர சேவாக் வெளியிட்டிருக்கும் டுவீட் தான் இப்போது வைரல்.
அதில், பும்ராவின் பந்துவீச்சை பாராட்டி ட்வீட்டியுள்ளார் சேவாக். ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தனது பந்துவீச்சில் சக வீரரான டி காக், சென்னை அணியின் விக்கெட்டை தவறவிடும் போது பும்ரா அதனை சாதரணமாக எடுத்துக் கொண்டார். ஆனால் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேனான டி காக்கிற்கு, எவ்வித கருணையையும் பும்ரா காட்டவில்லை என்று கூறியுள்ளார்.