மும்பை: பவுன்சர்களை கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யக் கூடாது. அதுதொடர்பான பரிசீலனையில் ஐசிசி ஈடுபடக் கூடாது. பவுன்சர்கள் இல்லாத கிரிக்கெட் ஆட்டம் வேடிக்கையாக இருக்காது என்று கூறியுள்ளார் வீரேந்திர ஷேவாக்.
இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போன ஷேவாக், பில் ஹியூக்ஸ் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பில் ஹியூக்ஸ் பவுன்சர் பந்துக்குப் பலியானவர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடந்தது. இந்த நிலையில் நேற்று மும்பைக்கு வந்த ஷேவாக் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பவுன்சர் பந்து தாக்கி பில் ஹியூக்ஸ் மரணமடைந்திருப்பது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது.

வேகமாக வந்த பவுன்சர் பந்தை அவர் புல் ஷாட்டாக அடிக்க முற்பட்டபோது பந்து தலையில் பட்டு காயமடைந்தார் ஹியூக்ஸ். ஆனால் கிரிக்கெட்டில் இதுவும் ஒரு அங்கம்தான்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த ஷாட்டாக இருந்தாலும் அது ரிஸ்க்கானதுதான். காயம் வருவது இயல்புதான். ஏன் மரணமும் கூட சம்பவிக்கலாம். ஆனால் அதை சமாளிக்க வழி உண்டு. அந்தப் பந்தை அடிக்காமல் தவிர்க்கலாம். அதை முடிவு செய்ய வேண்டியது பேட்ஸ்மேன்தான்.
பவுன்சரை எடுத்து விட்டால் கிரிக்கெட்டில் ஃபன் இருக்காது. பின்னர் அது பேட்ஸ்மேனின் ஆட்டமாக மாறி விடும். பந்து வீச்சாளர்களுக்கு விறுவிறுப்பு இருக்காது. எனவே அதை தடை செய்வது குறித்து ஐசிசி பரிசீலிக்கக் கூடாது. செய்யாது என்று நம்புகிறேன் என்றார் ஷேவாக்.
மேலும் அவர் கூறுகையில், நான் பலமுறை பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டுள்ளேன். எல்லாமே எனது ஹெல்மட்டில்தான் தாக்கியுள்ளன. அதுபோன்ற அபாயகரமான பந்துகளை ஆடாமல் தவிர்த்து விடலாம். இதை எடுத்து விட்டால் பந்து வீச்சாளர்களுக்கு எதுவுமே இல்லாமல் போய் விடும் என்றார் ஷேவாக்.