மும்பை : 2௦11 உலகக்கோப்பை வென்றது குறித்து பேசிய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், அப்போது தோனி சொன்ன ஒரு அறிவுரை எப்படி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தது என்பது பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
2011 உலகக்கோப்பை தொடரின் போது தோனி கேப்டனாக இருந்தார். கேரி கிர்ஸ்டன் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போது வீரேந்தர் சேவாக் துவக்க வீரராக தன் பங்களிப்பை அளித்தார்.

அந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் எப்படி தங்களை தயார் செய்து கொண்டார்கள். அதற்கு கேரி கிர்ஸ்டன் மற்றும் கேப்டன் தோனி என்ன மாதிரி யோசனைகளை கூறினார்கள் என ஒரு பேட்டியில் சேவாக் கூறினார்.
"நாங்கள் செய்தித்தாள்களைப் படிக்க மாட்டோம், வெளிப்புற சத்தத்தைக் (ஊடக செய்திகள் மற்றும் விமர்சனங்களை) கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். இது ஒரு விதியாகிவிட்டது, கிட்டத்தட்ட அனைவரும் அதை உண்மையாக பின்பற்றினர்." என்று அப்போது இந்திய அணியில் நடந்ததை விவரித்தார் சேவாக்.
மேலும், "நாங்கள் ஒன்றாக தங்கியிருந்தோம், நாங்கள் ஒரு அணியாக சேர்ந்து இருப்பதை ரசிக்கும் வகையில் மாற்ற முயற்சித்தோம். ஏனெனில், இது போன்ற நீண்ட தொடர்களில் வீரர்கள் ஒருவரை ஒருவர் (மனதளவில்) பிரிந்து செல்வது எளிது. கேரி கிர்ஸ்டன் மற்றும் எம்எஸ் தோனி இருவரும் நாங்கள் ஒன்றாக இருப்பதை உறுதி செய்தனர்" என்றார்.
இதை சொன்ன சேவாக், இறுதியாக தோனி சொன்ன அந்த ஒரு வரி அறிவுரையை குறிப்பிட்டார். "தோனி இந்த ஒரு வரி அறிவுரையை எங்களுக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். 'செயல்திட்டத்தில் கவனம் செலுத்துங்கள்'. எங்கள் அணியின் செயல்திட்டம் நன்றாக இருந்தது, அதனால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்" என்று சேவாக் அப்போது நடந்தவற்றை நினைவு கூர்ந்தார்.
2011க்கு பிறகு இந்திய அணி இதுவரை எந்த டி20 உலகக்கோப்பை உட்பட எந்த உலகக்கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.