“அவங்க செஞ்ச மகா தப்பே அதுதான்”.. இந்திய அணியின் படுதோல்விக்கான காரணம்.. சேவாக் விளாசல்!
மும்பை: இந்திய அணி மிகப்பெரும் தவறுகளை செய்து வருவதாக முன்னாள் வீரர் சேவாக் குற்றம்சாட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி படு மோசமான தோல்வியுடன் வெளியேறியது. இங்கிலாந்துடனான அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
அதுவும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 168 ரன்களை குவித்த போதும், எப்படி கட்டுப்படுத்த முடியாமல் என்பது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதனால் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

சேவாக் விளாசல்
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 12 ஓவர்களில் வெறும் 82 ரன்களை குவித்த போதும், அதன்பின்னர் வந்த வீரர்கள் சுதந்திரமாக பேட்டை விட வேண்டும் என நினைப்பதுஎப்படி சரியாகும். அதுவும் அடுத்த 8 ஓவர்களில் 100 ரன்கள் அடித்ததே பெரிய விஷயம்.

அதை ஏற்க முடியாது
அடிலெய்ட் மைதானத்தில் சராசரி ஸ்கோர் 150 - 160 ரன்கள் தான் என்பது சரிதான். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் நன்கு செட்டில் ஆகிவிட்டால் சராசரி என்பது கணக்கிலேயே இருக்க கூடாது. வான்கடே, சென்னை போன்ற மைதானங்களில் அதிக ஸ்கோர்களை நாம் பார்த்திருப்போம். அதே போன்று தான் இங்கிலாந்துடனான போட்டியில் 150 - 160 என்ற இலக்கை வைத்துக்கொண்டு வெல்ல முடியாது.

பவுலிங்கில் ஏமாற்றமா?
இதே போன்ற அணுகுமுறையினால் தான் நியூசிலாந்து அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. ஒருவேளை இந்திய அணி, தான் இந்த ஸ்கோரை வைத்து வெற்றி பெற முடியும் என நினைத்திருந்தால், பவுலிங் சொதப்பல் எனக்கூறலாம். ஆனால் நான் அதனை ஏற்க முடியாது. முதல் 10 ஓவர்களிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. நமது பேட்ஸ்மேன்கள் மொத்தத்தில் நல்ல தொடக்கத்தை தரவில்லை என சேவாக் கூறியுள்ளார்.

ரோகித்தின் பேச்சு
இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த ரோகித் சர்மா, நாங்கள் சிறப்பாக தான் பேட்டிங் செய்தோம். கட்டுப்படுத்தக்கூடிய ஸ்கோரை தான் அடித்தோம். ஆனால் பவுலிங்கில் தான் சற்று ஏமாற்றத்தை அடைந்தோம். இந்த களத்தில் 16 ஓவர்களில் இலக்கை எட்டிவிட முடியாது. அப்படி என்றால் பவுலர்கள் தான் சொதப்பிவிட்டனர் எனக்கூறலாம் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications