டெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடும்படி காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்சில் இந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி துவங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம்பெறுகின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா செப். 18ல் தகுதிச் சுற்றில் வெல்லும் அணியுடன் விளையாடுகிறது. செப். 19ல் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்திய அணி விளையாடும்படி காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு தினப் போட்டியில் விளையாடும் வீரர், சோர்வில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவை. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு, பரபரப்பு இருக்கும். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாள்கள் விளையாடுவது சாத்தியமில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிசிசிஐ அதிகாரிகளும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளனர். பல்வேறு முன்னாள் வீரர்களும், இதே கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.