செல்ம்ஸ்போர்ட்: இங்கிலாந்தின் கவுண்டி அணியான எசக்ஸ் உடனான ஆட்டத்தின்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து பழைய நட்பு குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் எசக்ஸ் அணியின் வருண் சோப்ரா.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்பாக, இங்கிலாந்து கவுண்டி அணியான எசஸ்க் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடியது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தின்போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், எசக்ஸ் அணியின் வருண் சோப்ராவும் சந்தித்து, தங்களுடைய நட்பு குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
2008ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அந்த காலகட்டத்தில் 2006ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் வருண் சோப்ரா. கோஹ்லியும், சோப்ராவும் அப்போது பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
இந்த இடைப்பட்ட 12 ஆண்டுகளில் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாகி, பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். ரன் குவிப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது 31 வயதாகும் சோப்ரா, 12 ஆண்டுகளாக இங்கிலாந்து உள்ளூர் அணிகளுக்காக விளையாடி வருகிறார். 183 முதல் தர போட்டிகளில், 9,868 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 20 சதமும் அடங்கும்.
19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியபோது, கோஹ்லியுடன் பழகினேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக உள்ளது என, டுவிட்டரில் சோப்ரா பகிர்ந்துள்ளார்.