
சுதாரித்து வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்துள்ளன. இந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. முதல் போட்டியில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை அடைந்த நிலையில், அடுத்த போட்டியில் சுதாரித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் சொதப்பல்
இந்த இரண்டு போட்டிகளின் 4 இன்னிங்சிலும் சேர்த்து அந்த அணியின் முக்கிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக 10 ரன்களே எடுத்துள்ளார். அணியின் டேவிட் வார்னர் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், ஸ்மித் மீது முழு நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை அவர் கடந்த இரு போட்டிகளிலும் பொய்யாக்கியுள்ளார்.

இந்திய அணியின் திட்டங்கள்
கடந்த இரு போட்டிகளில் இரண்டு முறை இந்திய ஸ்பின்னர் ரவி அஸ்வினிடம் வீழ்ந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இந்நிலையில் ஸ்மித்திற்கு எதிராக இந்திய அணியினர் மிகப்பெரிய திட்டங்களுடன் வந்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய அடி
நேரிடையான பந்துவீச்சு, ஸ்டம்ப்பை குறிவைத்து தாக்குதலை நிகழ்த்துவது மற்றும் இடது பக்கம் பீல்டிங் போன்ற பயங்கர திட்டங்களை ஸ்மித்திற்கு எதிராக இந்திய அணி பிரயோகித்து வருவதாகவும் ஹஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர் முழுவதும் ஸ்மித் சரியாக செயல்பட முடியாது என்றும் இது ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய அடி என்றும் அவர் கூறினார்.

பும்ராவின் தாக்குதல்
கடந்த ஆண்டில் நியூசிலாந்து அணியினர் ஸ்மித்திற்கு எதிராக ஷார்ட் பந்துகளை பிரயோகித்து சிலமுறை அவரை அவுட் ஆக்கினர். அதேபோல தற்போது பும்ரா தன்னுடைய தாக்குதலை ஸ்மித்திற்கு எதிராக நிகழ்த்தி வருவதாகவும் ஹஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிறப்பான வீரரான ஸ்மித் இதிலிருந்து வெளிவந்து தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications