டெல்லி: இதுவரை ஐபிஎல் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த பெப்சிகோ நிறுவனம் விடை பெற்றுக் கொண்டதால், புதிய ஸ்பான்சராக வைவோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம்தான் வைவோ.
யாருக்குமே அவ்வளவாக தெரியாத வைவோ நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சராக வந்துள்ளதன் மூலம் ஐபிஎல்லின் மகிமையும், மவுசும் குறைந்திருப்பதையே காட்டுகிறது.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக வைவோ நிறுவனம் விளங்கும். பெப்சிகோ நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அதே ஒப்பந்த விதிமுறைகள் வைவோ நிறுவனத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளதாம்.
2013 முதல் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது பெப்சி நிறுவனம். ரூ. 396.8 கோடிக்கு இந்த ஸ்பான்சரைப் பெற்றது பெப்சிகோ. ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் முறைகேடுகள் அதிகரித்து விட்டதால் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக பெப்சி கூறி விட்டது. இதனால் தற்போது புதிய ஸ்பான்சரை பிசிசிஐ பிடித்துள்ளது.