அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் கிரிக்கெட் போர்டு சார்பில் அந்த நாட்டில் டி20 தொடர் வரும் டிசம்பர் 19 முதல் நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக நடைபெறும் அந்தத் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்க உள்ளது. இந்த தொடரின் தூதராக ஏ.பி.டிவில்லர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்காக இந்தியாவில் இருந்து விவிஎஸ் லக்ஷ்மண், வெங்கடேஷ் பிரசாத், சஞ்சய் பங்கர், ராபின் சிங் உள்ளிட்டோரை பயிற்சியாளர்களாக அந்த தொடரில் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. அதே போல பாகிஸ்தானில் இருந்து ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டக், இன்சமாம் உல் ஹக், சயீத் அஜ்மல், வக்கார் யூனிஸ் ஆகியோரும் பயிற்சியாளர்களாக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் எந்தெந்த அணிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்பது ஏலம் மூலம் முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, இவர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பயிற்சியாளர்கள் ஒரே அணிக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தொடர் ஐபிஎல் போலவே, உள்ளூர் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் இணைந்து ஆடும் வகையில் இருக்கும். இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. பாகிஸ்தான் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி வரும் நிலையில், இந்த தொடரை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது தெரியவில்லை. மற்ற நாட்டு வீரர்கள் பலரும் பங்கேற்பார்கள் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.