மும்பை: ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஆசியப் போட்டிகள் சீனாவில் வரும் செப்.23ஆம் தேதி முதல் அக்.8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆசியப் போட்டிகள் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உட்பட மொத்தமாக 18 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதற்கான இந்திய அணியில் ஜூலை இரண்டாம் வாரத்திலேயே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தவான் தேர்வு செய்யப்படாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அணியில் திலக் வர்மா, சிவம் துபே, ஆவேஷ் கான், ரிங்கு சிங், நிதிஷ் ராணா உட்பட ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏராளமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் ஆசியப் போட்டிகளில் இந்திய அணி நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடும் என்று தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஆசியப் போட்டிகளின் நாக் அவுட் மற்றும் இறுதிப்போட்டிகள் நடக்கும் போது, உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியிருக்கும். இதனால் ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியுடன் எந்த பயிற்சியாளர்கள் குழு பயணிக்கும் என்று தெரியாமல் இருந்தது. ஏனென்றால் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செல்லவில்லை.
இந்த நிலையில் ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணியுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணி தங்கப் பதக்கத்தை நிச்சயம் வென்று நாடு திரும்பும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.