“சிஎஸ்கே கோச் ஆக விவிஎஸ் லக்ஷ்மன் வந்தால் உடனே கப் அடிக்கலாம் என்று சொல்லலை ஆனால்” - சடகோபன் ரமேஷ்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சடகோபன் ரமேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், சிஎஸ்கே-வின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷ்மன் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்கான மூன்று மிக முக்கியமான காரணங்களை அவர் விரிவாக விளக்கியுள்ளார். சடகோபன் ரமேஷ் தனது வீடியோவில் பேசியதாவது -
1 - சிஎஸ்கே குடும்பத்தை பார்த்துக் கொள்வார்
"லக்ஷ்மன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதையும் தாண்டி அவர் ஒரு அற்புதமான மனிதர். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை, வீரர்களை எப்போதும் ஒரு குடும்பம் போல அரவணைத்துச் செல்வதுதான் பிளெமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின் பாணியாகும். அதற்கு லக்ஷ்மனின் குணாதிசயம் கச்சிதமாகப் பொருந்தும். ஒரு பெரிய அண்ணன் போல இருந்து, அணியில் இருக்கும் அனைவரையும் அக்கறையோடு கவனித்துக் கொண்டு, அன்போடு வழிநடத்தக்கூடிய பணிவும் மென்மையும் லக்ஷ்மனிடம் இயல்பாகவே இருக்கிறது. இது சிஎஸ்கே அணியின் குடும்பக் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்தும்."

2 - வெற்றிகளை குவித்த பயிற்சியாளர் லக்ஷ்மன்
"ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர் போன்ற முதன்மை பயிற்சியாளர்கள் இல்லாத சமயங்களில், இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக லக்ஷ்மன் செயல்பட்ட போதெல்லாம் இந்திய அணி மிகச் சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. அவர் பொறுப்பேற்ற பெரும்பாலான தொடர்களில் இந்திய அணிக்குக் கிடைத்த முடிவுகள் மிகவும் சிறப்பானவை." என்று கூறி உள்ள சடகோபன் ரமேஷ், லக்ஷ்மன் பயிற்சியாளராக இருந்து இந்தியா வென்ற தொடர்களை பட்டியலிட்டுள்ளார்.
- 2022ஆம் ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணம் (2-0 என்ற கணக்கில் வெற்றி)
- ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் (3-0 என்ற கணக்கில் வெற்றி)
- இந்திய மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் (2-1 என்ற கணக்கில் வெற்றி)
- நியூசிலாந்து சுற்றுப்பயணம் (1-0 என்ற கணக்கில் வெற்றி)
- 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில் தங்கம் வென்றது)
- உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் (4-1 என்ற கணக்கில் வெற்றி)
- 2024ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் (4-1 என்ற கணக்கில் வெற்றி)
- 2024ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் (3-1 என்ற கணக்கில் வெற்றி)
3 - சஞ்சு, ருதுராஜ் உடன் லக்ஷ்மனுக்கு சிறந்த புரிதல்
"சிஎஸ்கே அணியின் எதிர்கால வளர்ச்சிக்கு சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய பலமாக அமையலாம். லக்ஷ்மனின் பயிற்சியின்கீழ் சஞ்சு சாம்சன் எந்தவித அழுத்தமும் இல்லாமல், சுதந்திரமாக விளையாடி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியதை நம்மால் மறக்க முடியாது. ஒருவேளை சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனைத் தனது கேப்டனாகவோ அல்லது முக்கிய வீரராகவோ எதிர்காலத்தில் கொண்டுவர நினைத்தால், லக்ஷ்மனுக்கும் சஞ்சுவுக்கும் இடையே இருக்கும் இந்தச் சிறந்த புரிதல் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறும்.
அதுமட்டுமில்லாமல், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெயிக்வாடும் லக்ஷ்மனின் பயிற்சியின் கீழ்தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். இதனால் சிஎஸ்கே-வின் முக்கிய வீரர்களுடன் லக்ஷ்மனுக்கு ஏற்கனவே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது."
தனது வீடியோவின் இறுதியில் சடகோபன் ரமேஷ் மற்றொரு முக்கிய கருத்தையும் கூறினார். "லக்ஷ்மனை பயிற்சியாளராக நியமித்த உடனேயே சிஎஸ்கே கோப்பையை வென்றுவிடும் என்று நான் கூற வரவில்லை. ஆனால், இந்த முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுத்தால், அடுத்த சில ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியைச் சரியான பாதையில் கொண்டு செல்ல இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். சிஎஸ்கே நிர்வாகம் இதைக் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்கலாம்" என்று தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications

