இந்திய அணி தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. கடின இலக்கு என அனைவரும் நினைத்த நிலையில் இங்கிலாந்து அணி அசால்டாக 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ (124) - பென் ஸ்டோக்ஸ் (99) ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
தவறான முடிவு
இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் வி.வி.எஸ் லஷ்மண், இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ சிறப்பாக ஆடிய போது பிரசித் கிருஷ்ணா இறுதி நேரத்தில் 2 விக்கெட்களை எடுத்துக்கொடுத்து இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். அதனை பயன்படுத்திக்கொண்டு ஹர்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நேரத்திலும் ஏற்கனவே ரன்களை அதிகளவில் கொடுத்திருந்த க்ருணால் மற்றும் குல்தீப் யாதவுக்கு கோலி ஓவர் வழங்கி ஏமாற்றமளித்தார் என தெரிவ்ட்
திட்டம்
மேலும் அவர், அணியில் புவனேஷ்வர் குமார், ஷார்துல் தாகூர், பிரசித் உள்ளிட்ட அனைவரும் கடும் பிரஷருக்கு இடையே பந்துவீசினர். எனவே அதுபோன்ற நேரத்தில் 6வது பவுலரை கண்டிப்பாக பயன்படுத்திருக்க வேண்டும். ஹர்த்திக் பாண்டியாவை 6வது பவுலராக ஒரு 4 -5 ஓவருக்கு பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் 2 விக்கெட்டையாவது எடுத்திருப்பார். பவுலர்களை பயன்படுத்துவதில் கோலி மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என லக்ஷமண் தெரிவித்தார்.
விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்திருந்த விராட் கோலி, ஹர்த்திக் பாண்டியாவின் உடல்நிலையையும் நாம் கவனிக்க வேண்டும். அவரை டி20 தொடரில் பயன்படுத்தினோம். ஆனால் பேட்டிங், பவுலிங் என அவரின் பணிச்சுமையும் நாங்கள் கவனிக்க வேண்டும். ஹர்த்திக் அணியின் முக்கியமான வீரர் ஆவார். எனவே அவரின் ஃபிட்னஸை உறுதி செய்வது எங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார்.