
புதிய பயிற்சியாளர்
டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். விராட் கோலியும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், அடுத்த கேப்டனை நியமிப்பது குறித்த ஆலோசனைகளிலும் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிசிசிஐ விதிகளின்படி ஒரே வீரர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

டிராவிட் இடத்தில் லட்சுமண்
இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியை ஏற்றுக்கொள்ள முதலில் விவிஎஸ் லட்சுமண் மறுத்துள்ளார். இருப்பினும், பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலியே தனிப்பட்ட முறையில் லட்சுமணிடம் பேசியதாகவும் அதன் பின்னரே இது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷாவுக்கும் லட்சுமண் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்றே விரும்புகிறார்.

தயக்கம் ஏன்
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "கங்குலி, ஜெய்ஷா உள்ளிட்ட அனைத்து மூத்த நிர்வாகிகளுக்கும் என்சிஏ தலைவராக லட்சுமணை நியமிக்க வேண்டும் என்பதே விருப்பம். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட்டுக்கும் லட்சுமணுக்கும் சிறப்பான உறவு உள்ளது. இருப்பினும், இதில் இறுதி முடிவை லட்சுமண் தான் எடுக்க வேண்டும். அவர் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறார்.

பிசிசிஐ விருப்பம்
இதனால் தான் இன்னும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. அதேநேரம் இது குறித்து லட்சுமண் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பயிற்சியாளரோடு என்சிஏ தலைமையும் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்த சூழலில் மீண்டும் டிராவிட் - லட்சுமண் கைகோர்க்கும்பட்சத்தில் அது இந்தியாவுக்கு அதிக நன்மைகளைத் தரும்" என்று தெரிவித்தார்.

டிராவிட் - லட்சுமண்
இருப்பினும் என்சிஏ இயக்குநராகத் தனது பெயர் பரிசீலிக்கப்படுவது குறித்து இதுவரை லட்சுமண் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 1990களிலும் 2000களிலும் கிரிக்கெட்டை பார்த்தவர்களுக்கு டிராவிட் - லட்சுமண் பாட்னர்ஷிப்பை கண்டிப்பாக பார்த்திருப்பார்கள். அப்போது களத்திலும் இருவரும் ஜோடி சேர்ந்தால், இந்தியாவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிடும். அதேபோல இப்போது களத்திற்கு வெளியே இருவரும் ஜோடி சேர்ந்தால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் உறுதியாகிவிடும் என நம்புகிறது பிசிசிஐ. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











