பெங்களூர்: இந்திய அணியை வெளிநாட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்வதுதான் தனது இலக்கு என்று தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
மேற்கு இந்திய தீவுகளுக்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்கு நாளை இந்திய அணி புறப்படுகிறது. முன்னதாக இன்று, டிவிட்டர் இணையதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கும்ப்ளே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து மேலும் கூறியதாவது:

இந்திய அணியை தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதுவும் வெளிநாடுகளில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது எனது இலக்கு.
மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கு பிறகு உள்நாட்டில்தான் அதிக டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த தொடரை வெற்றியோடு ஆரம்பித்து வெளிநாட்டில் இந்திய அணி சாதித்தது என்ற பெயரை நிறுவ முயலுவோம்.
இப்போதுள்ள இந்திய அணியும், சவாலுக்கு தயாராக உள்ளது. 8 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி தொப்பியோடு டிரஸ்சிங் அறைக்கு செல்வது மிகவும் மகிழ்வான அனுபவமாக உள்ளது.
பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவதால் ரசிகர்களை ஈர்க்க முடியும் என்றால் அதை செய்வதில் தவறு இல்லை.
விராட் கோஹ்லியை ஜூனியர் கிரிக்கெட் வீரராக இருந்த காலம் முதலே எனக்கு தெரியும். கடந்த இரு வருடங்களில் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் பரிணாமம் காட்டி வருகிறார். நானும் மைதானத்தில் ஆக்ரோஷமாகவே செயல்பட்டேன். விராட்டும் அதைப்போலவே உள்ளார். அவரோடு இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.
பெங்களூரில் கல்லூரியில் படித்த காலங்களில் கட் அடித்து வெளியே சென்றது இல்லை. இதனால் சக நண்பர்கள் கோபத்திற்கு ஆளாகியுள்ளேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் கிரிக்கெட் பயிற்சியில் செலவிடுவேன்.
இவ்வாறு கும்ப்ளே தெரிவித்தார்.