அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஒமர்சாய் 97 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.3 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. வழக்கமாக சேஸிங்கில் சொதப்பும் தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் சிறப்பாக சேஸ் செய்து இலக்கை எட்டியுள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக தயாராகியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி குறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேசுகையில், எனது கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் காயமிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் அணியினருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் காயமிருந்தாலும் ஃபீல்டிங்கின் போது மீண்டும் வந்தேன். வெற்றி என்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும்.
இந்த வெற்றியை அடுத்தடுத்த போட்டிகளில் தொடர விரும்புகிறோம். இன்றைய ஆட்டத்தில் சேஸிங் செய்து சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். இது எங்கள் அணி வீரர்களின் மனதில் மிகப்பெரிய நம்பிக்கை விதைத்துள்ளது. வான் டர் டஸன் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார். அதேபோல் அவரை சுற்றி பேட்ஸ்மேன்கள் ஆடிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாவது பேட்டிங்கின் போது ஆடுகளம் சிறியளவில் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.
அகமதாபாத் மைதானத்தில் மீண்டும் விளையாட விரும்புகிறோம். அதற்கு முன்பாக மிகப்பெரிய சவால் ஒன்று உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ளது. அதில் வென்று மீண்டும் இதே மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.