ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், "டிராவிட் தானாக விலகவில்லை, அவர் பிரீமியர் லீக் கால்பந்து அணிகள் பாணியில் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம்" என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருப்பது, இந்த சர்ச்சைக்கு மேலும் எண்ணெய் வார்த்துள்ளது.
கடந்த 2025 ஐபிஎல் சீசனில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து படுமோசமாகச் செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் அணியிலிருந்து வெளியேற விரும்புவதாக செய்திகள் பரவின. இந்நிலையில், டிராவிட் அணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு அணியில் வேறு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலை குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஏபி டிவில்லியர்ஸ், "இதைப் பார்க்கும்போது, இது அணி உரிமையாளர்களின் முடிவாகத்தான் தெரிகிறது. அவர்கள் ராகுல் டிராவிட்டுக்கு வேறு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள், அதை அவர் நிராகரித்திருக்கிறார். ஒருவேளை, பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்திருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், "பிரீமியர் லீக் கால்பந்து தொடர்களில், ஒரு அணி சரியாக விளையாடவில்லை என்றால், அதன் உரிமையாளர்கள் உடனடியாக பயிற்சியாளர்களை நீக்கிவிடுவார்கள். அந்தளவுக்கு அங்கு அழுத்தம் இருக்கும். அதேபோல, ராஜஸ்தான் அணி கடந்த சீசனில் சரியாக விளையாடாததால், அதன் அழுத்தம் காரணமாக டிராவிட் வெளியேற்றப்பட்டிருக்கலாம். இது ஒருபோதும் ஒரு நல்ல சூழல் அல்ல" என்று அதிரடியாக கூறி இருக்கிறார்.
மேலும், "டிராவிட் ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். பல இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு அவர் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறார்" என்றும் டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டினார்.
ராஜஸ்தான் அணி நிர்வாகத்தின் மீதான தனது விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளாத டிவில்லியர்ஸ், "கடந்த மெகா ஏலத்திலேயே ராஜஸ்தான் அணி சிறப்பாகச் செயல்படவில்லை. ஜாஸ் பட்லர் போன்ற மிகச்சிறந்த வீரர்களை அவர்கள் அணியிலிருந்து விடுவித்தது ஒரு பெரிய தவறு. ஒன்று அல்லது இரண்டு வீரர்களை விடுவிப்பதில் தவறில்லை. ஆனால், அணியின் முக்கிய வீரர்கள் பலரையும் ஒரே நேரத்தில் வெளியேற்றியது சரியான அணுகுமுறை அல்ல" என்றும் கடுமையாகச் சாடினார்.
மொத்தத்தில், ராகுல் டிராவிட்டின் விலகல், சஞ்சு சாம்சன் வெளியேற விரும்புவதாக வரும் செய்திகள், ஏபி டிவில்லியர்ஸின் இந்தக் கடுமையான விமர்சனங்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும் புயலில் சிக்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. இதிலிருந்து மீண்டு அடுத்த சீசனுக்கு அந்த அணி எப்படித் தயாராகும்? யார் புதிய பயிற்சியாளர்? யார் புதிய கேப்டன்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.