'வாஷிங்டன்' சுந்தர் பெயர் காரணம் என்ன? - தந்தையின் உருக்கமான பதில்
சென்னை: இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரின் பெயர் காரணம் குறித்து அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்து வெற்றியின் விளிம்பில் உள்ளது. முடிவு எப்படி இருந்தாலும், இத்தொடரில் பெயர் வாங்கிய ஒரே வீரர் என்றால் வாஷிங்டன் சுந்தரை சொல்லலாம்.
முதல் இன்னிங்ஸில் இறுதிக் கட்டத்தில் 85 ரன்கள் அடித்து, இந்திய அணியை மிக மோசமான நிலையிலிருந்து மீட்க உதவினார். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய தொடரில் கப்பா டெஸ்ட் போட்டியில், இக்கட்டான சூழலில் 62 ரன்கள் அடித்தது மட்டுமில்லாமல், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இனி அடுத்தடுத்த தொடர்களிலும் வாஷிங்டன் சுந்தரின் பெயர் தவறாமல் தேர்வு செய்யப்படலாம். இந்நிலையில், அவருக்கு ஏன் வாஷிங்டன் சுந்தர் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது குறித்து அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் காட்ஃபாதர்
சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு 2 தெரு தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வசித்து வந்தார். எனது சிறு வயதில் காட்ஃபாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பள்ளி சீருடை, பள்ளிக் கட்டணம், புத்தகம் வாங்கி கொடுத்தது வாஷிங்டன்தான்.

விளையாட்டில் ஆர்வம்
மெரினா பீச்சில் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். வாஷிங்டன் தனது சைக்கிளில் என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்வார். கிரிக்கெட் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம். என்னையும் ஊக்கப்படுத்தியபடி இருந்தார். அவரால்தான் நான் படிக்கவும், சிறப்பாக விளையாடவும் முடிந்தது.

ஸ்ரீநிவாசன்
1999ம் ஆண்டு, வாஷிங்டன் இறந்தார். அந்த ஆண்டுதான் எனது மனைவி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பேறுகாலத்தின்போது எனது மனைவி பல சிரமங்களை சந்தித்தார். கடவுள் அருளால் குழந்தையும், தாயும் நலமாகினர். இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என பெயரை ஓதினேன்.

அந்த பெயர் சூட்டினேன்
ஆனால், பி.டி.வாஷிங்டன் மீதான அன்பால் பிறகு அவரது பெயரை எனது மகனுக்கு சூட்டினேன். இப்படித்தான் வாஷிங்டன் சுந்தர் என்று எனது மகனுக்கு பெயர் வைக்கப்பட்டது என எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications