ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டி போல ஆடி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர். அந்த ஆட்டத்தால் தான் இந்திய அணி இந்த போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடியாக ரன் குவிப்பதை நிறுத்தவில்லை. அதன் காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்கு 172 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி நடந்த ராஜ்கோட் மைதானத்தில் எளிதாக ரன் குவிக்கலாம் என்பதால் இந்திய அணி இந்த இலக்கை எட்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. ஆனால், பவர் பிளே ஓவர்களுக்குள் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். திலக் வர்மாவும் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மிகவும் நிதானமாக ஆடினர். ஒன்று, இரண்டு ஓவர்கள் நிதானமாக ஆடி விட்டு அவர்கள் இருவரும் அதிரடியாக ரன் சேர்ப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், அதன் பின்னரும் இருவரும் ஒன்று, இரண்டு என சிங்கிள் ரன்களாக ஓடியதோடு டெஸ்ட் போட்டி போல பல பந்துகளை வீணடித்தனர். அதிலும் ஆமை வேகத்தில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் 13 வது ஓவரின் முதல் பந்தில் 6 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் 15 பந்துகளை சந்தித்து இருந்தார்.
வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டி போல ஆடியதால் இந்திய அணியின் தேவைப்படும் ரன் விகிதம் எகிறியது. 47 பந்துகளில் 87 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த அக்சர் பட்டேலும் அதே போல நிதானமான ஆடினார். அப்போது ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டு கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடலாம் என்ற வியூகத்தை ஹர்திக் பாண்டியா வகுத்ததாக தெரிகிறது.
ஆனால், ஹர்திக் பாண்டியா 18 வது ஓவர் வரை 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தொடாமல் நிதானமாக ரன் சேர்த்து வந்தார். இடையிடையே சில பவுண்டரிகளை அவர் அடித்து இருக்கலாம். ஆனால், ஹர்திக் பாண்டியா அதை செய்யவில்லை. அது ஏன் என்பதும் யாருக்கும் புரியவில்லை. கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்ட போது தான் அவர் பெரிய ஷாட் அடிக்க நினைத்தார்.
ஆனால், அப்போது அவர் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில் எதற்காக ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிறைய பந்துகளை வீணடித்தார்கள்? என்ற கேள்வி உள்ளது.
அதேபோல 18 வது ஓவர் வரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா எதற்காக பவுண்டரி அடிக்காமல் காத்திருந்தார்? என்பதும் புரியவில்லை. இந்த டெஸ்ட் போட்டி ஆட்டத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.