கொழும்பு: இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்துள்ளதால், அவருக்கான மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும், ஹிர்தாய் 54 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 259 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக சுப்மன் கில் 121 ரன்கள் விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 34 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் பேட்டிங் செய்த போது, திடீரென ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்காமல் இருக்க கீழே விழுந்தார்.
அப்போது அக்சர் படேலின் கைகளில் காயம் ஏற்பட்டது. குறிப்பாக இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால், அப்போதே பிசியோவை அழைத்து சிகிச்சை எடுத்துக் கொண்டதோடு, வலி நிவாரணி ஸ்ப்ரேயும் அடித்துக் கொண்டார். இருப்பினும் அக்சர் படேலின் விரலில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை. இதனால் நாளை நடக்கவுள்ள ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது,
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அணியின் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி நிர்வாகம் இலங்கைக்கு அழைத்துள்ளது. இன்று மாலைக்குள் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. ஆசிய கோப்பையில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தர், இந்திய அணிக்கு உதவியாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணியில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு எடுபடும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பவர் பிளே ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் கில்லியாக செயல்படுவார் என்று குறிப்பிடத்தக்கது.