துபாய் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தோனி போல ஆடியதாக புகழ்ந்துள்ளார் வாசிம் அக்ரம்.
சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் போராடி வென்றது. அதில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் அந்த அணியின் அனுபவ வீரர் ஷோயப் மாலிக்.

அவரை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் குரூப் சுற்றில் தோல்வி அடைந்தது. அந்த அழுத்தத்தோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் அணி 258 ரன்களை அடிக்க திணறியது.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சுழலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ஆடினர். கடைசி நேரத்தில் விக்கெட்களும் சடசடவென விழுந்தது.
அந்த நேரத்தில் கடைசி ஓவரில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஷோயப் மாலிக் இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதை தான் புகழ்ந்துள்ளார் வாசிம் அக்ரம். "அனுபவத்துக்கு மாற்றே இல்லை. ஷோயப் மாலிக் அதை மீண்டும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நிரூபித்தார். தோனி போல முடித்தார். மாலிக் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இருந்தார். அது அவர்களை எரிச்சலூட்டி இருக்கும்..சிறப்பான ஆட்டம்" என கூறியுள்ளார் அக்ரம்.